https://republictn.com/

பாஜகவில் இருந்து விலகும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முடிவு ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பாஜக தேசிய தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணாமலை அளித்திருந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட பாஜக தேசிய தலைமை, அவரை கட்சிப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் கையொப்பமிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அளித்திருந்த ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நித்தின் நவீன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்த சந்திப்புகளுக்குப் பின்னரே தற்போதைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அண்ணாமலையை கட்சியில் தக்கவைத்துக் கொள்ள தேசிய தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவை பலனளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அண்ணாமலையின் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போகிறாரா, புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போகிறாரா, வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் இணையப் போகிறாரா அல்லது அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு பாஜகவின் முக்கிய முகமாக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ உள்ளிட்ட பல்வேறு யாத்திரைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலம் கட்சியை மாநில அளவில் வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஊடகங்களிலும் தொடர்ந்து கட்சியின் நிலைப்பாடுகளை முன்வைத்து வந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தந்த போதெல்லாம் அண்ணாமலையுடன் சந்திப்பு நடத்துவது வழக்கமாக இருந்தது. தேசிய தலைமையிலும் அவருக்கு முக்கியத்துவம் இருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில், அதிமுக கூட்டணி தொடர்பான அரசியல் மாற்றங்கள் மற்றும் அவருக்கு எதிர்பார்த்த முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து அவர் தனது எதிர்காலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. தற்போது அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து வெளியாகவுள்ள அறிவிப்பையே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago