https://republictn.com/

தவெக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய விதம், அக்கட்சி செய்த சட்டரீதியான மிகப்பெரிய தவறு என அரசியல் விமர்சகர்களும், சட்ட வல்லுநர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

தவெக தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது கையாண்ட உத்தி, அக்கட்சிக்கு சாதகமாக அமையவில்லை. பொதுவாக, ஒரு தொங்கு சட்டசபை அமையும் போதோ அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் வரும்போதோ, ஒரு கட்சி இரண்டு வழிகளைப் பின்பற்றலாம். 1. தங்களை ஒரு தனிப்பெரும் கட்சியாக முன்னிறுத்தி, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருவது. 2. முன்கூட்டியே முறைப்படி அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரைச் சந்திப்பது.

இங்கு தவெக செய்த தவறு என்னவென்றால், நாங்கள் தான் தனிப்பெரும் கட்சி எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள் என தமிழ்நாடு ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கூட்டணி எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கணக்கில் காட்டி ஆட்சி அமைக்க உரிமை கேட்டு இருக்கிறார்கள். இங்கு தான் சிக்கல் ஏற்பட்டு விட்டது. கூட்டணி என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டுங்கள் என ஆளுநர் சொல்லிவிட்டார்.

ஒன்று தேவையான பலத்தை பெறும் வரை பொறுமை காத்திருக்க வேண்டும் இல்லை என்றால் தங்களை மட்டுமே முன்னிறுத்தி உரிமை கட்டி இருக்க வேண்டும் இரண்டையும் செய்யாமல் தவற விட்டு விட்டார்கள் என சட்டவல்லுநர்கள் கருத்து.

‘கூட்டணி’ என்று ஒரு கட்சி குறிப்பிடும்போது, அந்தச் சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் உங்களிடம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு. “கூட்டணி என்று சொல்லும் பட்சத்தில், ஆட்சிக்குத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு எங்கே?” என்ற ஆளுநரின் தர்க்கரீதியான கேள்விக்கு தவெக-விடம் தெளிவான பதில் இல்லை. தேவையான பலத்தை உறுதிப்படுத்தாமல், ஒரு சில உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு ‘கூட்டணி’ என தவெகஉரிமை கோரியது முதிர்ச்சியற்ற அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

சட்ட வல்லுநர்கள் கூறுவது போல விஜய் இரண்டு முக்கியமான மாற்று வழிகளை கையாண்டிருக்க வேண்டும். தேவையான இடங்களை அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவை முறைப்படி திரட்டும் வரை காத்திருந்திருக்க வேண்டும். அவசரப்பட்டு போதிய பலமில்லாமல் உரிமை கோரியது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற கட்சிகளைச் சார்ந்திருக்காமல், தங்களை மட்டுமே முன்னிறுத்தி ஆளுநரைச் சந்தித்திருந்தால், ஒருவேளை ஆளுநர் தவெக-வை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்க வாய்ப்பிருந்திருக்கும்.

அரசியலில் ஒரு கட்சியின் கொள்கைகளை விட, சட்டரீதியான, நுட்பமான நகர்வுகளே அந்தப் பதவியில் அமர வைக்கும். தவெக-வின் இந்த அணுகுமுறை, அக்கட்சியின் சட்ட ஆலோசனைக் குழுவின் தோல்வியாகவே கருதப்படுகிறது. ‘கூட்டணி’ என்ற ஒற்றைச் சொல், அவர்களின் ஆட்சி அமைக்கும் கனவிற்குப் பெரும் தடையாக மாறிவிட்டது. வரும் காலங்களில் இத்தகைய சட்ட நுணுக்கங்களைக் கையாளுவதில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே அக்கட்சியால் நிலையான அரசியல் வெற்றியைப் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago