இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அவர் நார்வே நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது, நார்வே நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் (Helle Lyng), பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார். “உலகின் மிகவும் சுதந்திரமான ஊடகங்களை கொண்ட நாட்டில் இருந்தும், சில கேள்விகளுக்கு நீங்கள் ஏன் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். எனினும், அந்த கேள்விக்கு பிரதமர் மோடி நேரடியாக பதிலளிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஹெல்லிங் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில், நார்வே பத்திரிகை சுதந்திர குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது என்றும், இந்தியா 157வது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கியூபா போன்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அவை மீண்டும் மீண்டும் எழுப்பப்படும் என்றும், கேள்வி கேட்பதே பதில் பெறும் வழி என்றும், வெறும் மேடை பேச்சுகள் மட்டும் போதாது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
இந்த பதிவு மற்றும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, நார்வேவில் உள்ள இந்திய தூதரகம், அதே நாளின் பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்கு ஹெல்லிங்கிற்கு அழைப்பு விடுத்தது.
அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த இந்திய தூதர் சிபி ஜார்ஜ், சில தன்னார்வ அமைப்புகள் (NGO) வெளியிடும் அறிக்கைகளை மட்டும் அடிப்படையாக கொண்டு இந்தியாவை மதிப்பிட வேண்டாம் என்று கூறினார். இந்தியாவில் தினமும் பல முக்கிய செய்திகள் நடைபெறுகின்றன. அவற்றை புறக்கணித்து, சில அமைப்புகள் வெளியிடும் சில தகவல்களை மட்டுமே கொண்டு கருத்து கூறுவது தவறான புரிதலை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஹெல்லிங் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் அவரை வெளிநாட்டு உளவாளி, கைக்கூலி என விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து எழுதிய கட்டுரைகளும் சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு விவாதத்திற்கு உள்ளானது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஹெல்லிங், “நான் எந்த வெளிநாட்டு அரசாங்கத்தாலும் அனுப்பப்பட்டவர் அல்ல. நான் உளவாளியும் அல்ல. இதை விளக்க வேண்டிய நிலை வரும் என்று நான் நினைக்கவில்லை. பத்திரிகையாளர்களின் வேலை நேருக்கு நேர் கேள்விகள் கேட்பதே” என்று தெரிவித்துள்ளார்.
