மின்கட்டண விவகாரம் தொடர்பாகத் தான் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சின்னத்திரை நடிகை வைஷாலி பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். தான் வெளியிட்ட கருத்துகளில் ஏற்பட்ட தவறை உணர்ந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட மனவருத்தத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளில் இதுவும் ஒன்றாகக் கூறப்பட்டது.

இதற்கு முன்னதாக, திமுக ஆட்சியில் அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த அறிவிப்பு ஒருபுறம் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இதனை வரவேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில், சின்னத்திரை நடிகை வைஷாலியும் அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “பார்த்தீங்களா, எங்க அண்ணனோட முதல் கையெழுத்தே 200 யூனிட் இலவச மின்சாரம்தான். இனிமேல் உங்கள் வீட்டில் மின்கட்டணப் பிரச்சினையே இருக்காது. இது வெறும் ஆரம்பம்தான். இனிமேல்தான் அதிரடி ஆரம்பிக்கப் போகிறது. தமிழ்நாடே மாறப்போகிறது. பார்த்துக்கொண்டே இருங்கள்” என்று உற்சாகமாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக வழக்கத்தைவிட அதிக அளவில் மின்கட்டணம் வருவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. சில குடும்பங்களுக்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது பல மடங்கு அதிகமாக மின்கட்டணம் வந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வந்தனர்.
மின்கட்டண உயர்வு தொடர்பான இந்தப் புகார்கள் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறின. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்கனவே பல்வேறு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதிகரித்த மின்கட்டணமும் கூடுதல் சுமையாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், நடிகை வைஷாலி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக சாமானிய மக்களுக்கு அதிக அளவில் மின்கட்டணம் வந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், “எனக்கும் இதே நிலைமைதான். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மின்கட்டணத்தில் 200 யூனிட் இலவசம் என்று சொன்ன மாதிரி, நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்படியே போனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கஷ்டமாகிவிடும். எனவே, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொன்னதைத் திரும்பப் பெற்றுவிட்டு, இதற்கு முன்னால் மின்கட்டணம் எவ்வளவு வந்ததோ, அதே அளவில் மீண்டும் வழங்கினால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறினார்.
மேலும், இதே நிலை தொடர்ந்தால் தமிழக வெற்றிக் கழக ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
வைஷாலியின் இந்தக் கருத்துகள் வெளியானதும், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதம் ஏற்பட்டது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலர் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் விஜயின் மின்சாரத் திட்டத்தை விமர்சிக்கும் வகையில் அவரது பதிவு அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால், தான் முன்பு வெளியிட்ட கருத்துகள் குறித்து வைஷாலி விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது அவர் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தான் வெளியிட்ட கருத்துகளால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, தனது தவறை உணர்ந்துள்ளதாகவும், தனது வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மின்கட்டண விவகாரம் தொடர்பாகத் தனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும், பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையிலும் கருத்து தெரிவித்ததாகக் கூறிய வைஷாலி, அந்தக் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விஜயின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பைப் பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்த வைஷாலியே, பின்னர் மின்கட்டணம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து வீடியோ வெளியிட்டது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளானது.
ஒருபுறம், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம், நடைமுறையில் மின்கட்டணம் அதிகமாக வருவதாக பொதுமக்கள் முன்வைக்கும் புகார்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சூழலில்தான் நடிகை வைஷாலியின் மன்னிப்பு வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. தனது முந்தைய கருத்துகளால் ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் இந்த மன்னிப்பைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், மின்கட்டண விவகாரம், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மற்றும் நடிகை வைஷாலியின் அடுத்தடுத்த கருத்துகள் ஆகியவை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன.
