சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியைச் சேர்ந்த காளியப்பன்–காளீஸ்வரி தம்பதியின் மூன்றாவது மகளான 14 வயது துர்கா, தொண்டையில் சதை வளர்ச்சி காரணமாக சிகிச்சைக்காக காரைக்குடி சூரக்குடி பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்கு சிறுமிக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளை பெற்றபோது, ஆய்வக தொழில்நுட்ப நிபுணர், குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாகவும், கல்லீரல் தொடர்பான பிரச்சனையும் இருப்பதாகவும் தெரிவித்ததுடன், உடனடியாக குழந்தைகள் நிபுணரை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நிபுணரை அணுக முயன்றபோது மருத்துவர் இல்லாததால், அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பரிசோதனை முடிவுகளை காண்பித்துள்ளனர். அங்கு மீண்டும் சிறுமிக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எந்தவித பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளது.
மேலும், தொண்டையில் உள்ள சதை வளர்ச்சிக்கு நான்கு நாட்கள் மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்தால் சரியாகும் என தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தவறான பரிசோதனை முடிவு வழங்கியதாக கூறி, சிறுமியின் தாய் மற்றும் அத்தை இன்று காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கு வந்த மருத்துவர்கள், தவறான பரிசோதனை முடிவு வழங்கப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
