திமுக கூட்டணியின் நீண்ட கால கூட்டாளியான மதிமுக, தற்போது ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவ, முதல்வர் ஜோசப் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளியாகி உள்ளது.
உதயசூரியன் சின்னம் கொடுத்த அதிருப்தி
கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பிய போதிலும், திமுக தரப்பில் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட அக்கட்சியினருக்கு இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
“உதயசூரியன் சின்னத்தில் நின்றது துரதிஷ்டவசமானது. நாம் தனிச் சின்னத்திலேயே நின்றிருக்கலாம் என்ற ஆதங்கம் எங்களுக்குள் இருக்கிறது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அண்மையில் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இந்தச் சூழல்தான் மதிமுகவை மாற்றுப் பாதையை நோக்கிச் சிந்திக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் அரசுக்கு மதிமுக புகழாரம்
சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது ஸ்டெர்லைட் விவகாரம் குறித்துப் பேச வைகோ சென்றதாகக் கூறப்பட்டாலும், அதன் பின்னணியில் தவெக- மதிமுக இடையே ரகசிய கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
அண்மைக்காலமாகவே தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகத்திற்கு ஆதரவாக மதிமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். “தற்போது அமைந்துள்ள இந்த அரசு கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கே இடமில்லாமல், மக்களுக்கு மனதைக் குளிர்விக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான நிர்வாகத்தை வழங்கி வருகிறது” எனத் துரை வைகோ தவெக அரசைப் பாராட்டிப் பேசியுள்ளார்.
இடைத்தேர்தல் வியூகம்?
முதல்வர் விஜய்யை வைகோ நேரில் சந்தித்துப் பேசியுள்ளது, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியேறப் போவதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது மட்டுமல்லாமல், தவெக-வோடு கூட்டணி அமைக்கும் நோக்கில், மதிமுகவின் தற்போதைய இரண்டு எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் வைகோவே நேரடியாகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் புதிய தகவல்கள் உலா வருகின்றன.
பேரம் பேசும் உத்தியா? புதிய கூட்டணியா?
கூட்டணி தர்மம் என்ற பெயரில் திமுகவிடம் தவித்த மதிமுக, இனி தவெக-வுடன் கைகோர்த்து புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கப் போகிறதா? அல்லது இது திமுக கூட்டணியை அச்சுறுத்தி, வரும் காலங்களில் அதிக இடங்களைப் பெறுவதற்கான ஒரு பேரம் பேசும் உத்தியா? என்ற கேள்வி அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
