https://republictn.com/

தமிழ்நாட்டில் பிரபலமான சாப்பாட்டு யூடியூபராக அறியப்படுபவர் இர்பான். இவர் சாலையோர உணவுக் கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை சென்று உணவுகளை ருசித்து, அவற்றை விமர்சனம் செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவ்வாறு பிரபலமானவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சர்ச்சைகளிலும் இர்பான் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறார்.

முன்னதாக, தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்ததாக கூறப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி, அந்தக் காட்சிகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டதும் பெரும் விவாதத்திற்குள்ளானது.

மேலும், தனது மனைவியுடன் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவளித்த போது அவர் நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். ஏழைகளிடம் இவ்வாறு நடந்து கொள்வது சரியா எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், தற்போது அவரது பிரியாணி பிசினஸ் தொடர்பான விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தனது வீட்டிலேயே தயாரித்த பிரியாணியை “இர்பான்ஸ் வியூ பிரியாணி” என்ற பெயரில் விற்பனை செய்வதாக அவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஆனால், இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியதற்குக் காரணம் அதன் விலை எனப்படுகிறது. ஒரு பக்கெட் மட்டன் பிரியாணி பார்சலுக்கு ரூ.3,650 முதல் ரூ.4,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, இது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பிரீமியம் தரமான பாசுமதி அரிசி, உயர்தர மட்டன், சிறப்பு ரெசிபி உள்ளிட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், விலை அதிகமாக இருப்பதே அதிகமாக பேசப்பட்டது. அதே நேரத்தில், முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆர்டர்களும் குறுகிய நேரத்திலேயே விற்றுத் தீர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரியாணியை வாங்கி சுவைத்த சில பிரபல யூடியூபர்கள் மற்றும் உணவுப் பிரியர்கள் வெளியிட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர்களில் ஒருவர், பக்கெட்டை திறந்தபோதே அது முழுமையாக நிரப்பப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், இர்பான் ஒரு கிலோவுக்கு மேல் மட்டன் இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், எடை பார்த்தபோது 4 கிலோ பிரியாணியில் சுமார் 700 கிராம் மட்டுமே மட்டன் இருந்ததாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

அதேபோல், பிரியாணியை ருசித்த மற்றொரு யூடியூபர், “பிரியாணி மோசம் இல்லை, ஆனால் ஓகே ரகம்தான். ரூ.3,650 கொடுத்து வாங்கும் அளவுக்கு சிறப்பாக இல்லை” என கூறியுள்ளார். இன்னும் சிலரும் “சாதாரணமான டேஸ்ட் மட்டுமே உள்ளது” என விமர்சித்துள்ளனர்.

இந்த வீடியோக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று, பெரும் விவாதத்தை உருவாக்கின.

இதனைத் தொடர்ந்து, பலர் இர்பானின் முதல் உணவு பிசினஸ் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றும், எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

மற்றவர்களின் பணியை விமர்சிப்பது எளிது; ஆனால் தாமே ஒரு தயாரிப்பை உருவாக்கும் போது அதன் சவால்கள் புரியும் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, இவர் பாராட்டிய ஒரு உணவகத்தில் பின்னர் சுகாதார குறைபாடுகள் இருப்பதாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த சம்பவமும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கிடையில், “ரூ.3,650க்கு பிரியாணியா?” எனும் வகையில் ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் பரவி வருகின்றன. “இந்த விலைக்கு பைக் EMIயா?”, “பிரியாணி வாங்கினால் தங்கம் இலவசமா?” போன்ற காமெடி பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

மற்றொரு தரப்பினர், மற்ற கடைகளில் குறைந்த விலைக்கு கூடுதல் ஸ்நாக்ஸ் வழங்கப்படும்போது, இங்கு அந்த அளவிலான சலுகைகள் இல்லாதது குறித்து விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.

மொத்தத்தில், இர்பானின் முதல் பிரியாணி வணிக முயற்சி பாராட்டுகளை விட அதிகமான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. அதே நேரத்தில், பிரீமியம் தயாரிப்புக்கு பிரீமியம் விலை நியாயமானதே என அவரது ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago