தமிழ் திரையிசையின் இரு ஜாம்பவான்களான இசை மேதை எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசர் கண்ணதாசன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய இளையராஜா, “உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் இசை ரசிகர்களும் இன்று கவியரசர் கண்ணதாசனையும், எம்.எஸ்.வி அண்ணா அவர்களின் 98-வது பிறந்தநாளையும் கொண்டாடி வருகிறார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நீங்கள் இன்று மட்டும் அவர்களை நினைத்து கொண்டாடுகிறீர்கள். ஆனால் நான் இசையோடு வாழ்பவன் என்பதால், தினமும் அவர்களை நினைக்காமல் என் வேலையைத் தொடங்க முடியாது. என்னுடைய நினைவில் மட்டுமல்ல, அனைவரின் நினைவிலும் அவர்கள் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, அவர்களை நினைக்காமல் இசையைத் தொடவே முடியாது. மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றி கூறிய ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்ற வரிகளைப் போல, என் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் பெற்றிருப்பவர்கள் கவியரசர் கண்ணதாசனும், எம்.எஸ்.வி அண்ணாவும் தான்.
அவர்களின் புகழ் என்றென்றும் ஓங்குக… என்றென்றும் ஓங்குக… என்றென்றும் ஓங்குக…” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
தமிழ் இசை மற்றும் பாடல் உலகில் அழியாத தடம் பதித்த எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசன் ஆகியோரின் பிறந்தநாளை ஒட்டி, அவர்களின் பெருமைகளை நினைவுகூர்ந்த இளையராஜாவின் இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 2ஆம் தேதி தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடிய இளையராஜா, தன்னை நேரில் சந்தித்தும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதேபோல், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலினுக்கும் அந்த வீடியோவில் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், ஜூன் 2ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற தனது பிரம்மாண்ட சிம்பொனி இசைக் கச்சேரி குறித்த அறிவிப்பையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், அதற்கு முன்பாக ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ் இசை உலகின் இரு மகத்தான ஆளுமைகளை நினைவுகூர்ந்து இளையராஜா வெளியிட்டுள்ள இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
