திமுகவின் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ஆ.ராசா, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே மேடையில் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் அதிகப்பிரசங்கித்தனம்:
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், “திமுகவுடன் கூட்டணி இல்லை” என்றும், “யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்” என்றும் பொதுவெளியில் பேசி வருவதற்கு ஆ.ராசா தனது பேச்சில் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். “திமுக கூட்டணியில் 60-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் தோழமையோடு இருக்கும்போது, ஒரு சில தலைவர்கள் இப்படி ‘அதிகப்பிரசங்கித்தனமாக’ பேசுவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களின் நம்பிக்கை ஸ்டாலின் மட்டுமே
தொடர்ந்து பேசிய அவர், “அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டமன்றத்தில் இன்று தகுதியற்றவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். ஒரு பொதுத் தேர்தலை வைத்து இந்தத் தலைவன் ஸ்டாலினை எடைபோட்டு அனுப்பிவிட முடியுமா? தமிழகத்தின் தாய்மார்களும், பொதுமக்களும் ‘தமிழ்நாடு உங்களைத்தான் நம்பியிருக்கிறது, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என ஸ்டாலினிடம் உருகுகின்றனர். கலைஞரின் ஒட்டுமொத்த உழைப்பும் இந்தத் தலைவரிடம்தான் உள்ளது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஆ.ராசாவின் அதிரடி ட்விஸ்ட்
பேச்சின் இறுதியாக, மேடையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கித் திரும்பிய ஆ.ராசா, ஒரு அதிர்ச்சியான கோரிக்கையை வைத்தார். “தலைவரே, என்னை மன்னித்துவிடுங்கள்… கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும் பரவாயில்லை, நான் உங்களிடம் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் நாம் யாரிடமும் கூட்டணி வைக்க வேண்டாம்! தனித்தே களம் காண்போம். தமிழ்நாட்டைக் காப்பாற்ற நமக்கு பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியும், நமது சொந்த பலமும் மட்டுமே போதும். யாரையும் நாம் நம்பி இல்லை” என ஆக்ரோஷமாகப் பேசி முடித்தார்.
கூட்டணிக் கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே “இனி கூட்டணியே வேண்டாம்” என முதலமைச்சரின் முகத்திற்கு நேராகப் பேசியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்திலும் கோட்டை வட்டாரத்திலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
