கடந்த ஆண்டு, 2025 ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், மாநிலங்களின் உண்மையான உரிமைகளை பாதுகாக்கவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தவும், இந்திய அரசின் உத்தரவுகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்து மறுமதிப்பீடு செய்யவும், தேவையான பரிந்துரைகளை வழங்கும் வகையில் ஒரு குழுவை அமைக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், மாநில சுயாட்சி தொடர்பான பணிகளை ஆய்வு செய்வதற்காக, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று மேலும் ஒரு ஆய்வுக் குழுவை மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.
நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக 234 தொகுதிகளில் 164 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான ஆதரவை திமுக கூட்டணிக் கட்சிகள் வழங்கியதையடுத்து, முதல்வராக விஜய் பதவியேற்றார்.
இதற்கிடையில், திமுக சந்தித்த தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், இந்தத் தேர்தல் தோல்வி ஒரு அரசியல் சுனாமி போன்றது. கட்சித் தலைவராக இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன். வெற்றிக்கான பெருமையை ஏற்றுக்கொள்ளும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு மக்கள் நலனுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, கட்சியின் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக 20 நாட்களுக்குள் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும், அந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு தொகுதியிலும் கட்சித் தொண்டர்களின் கருத்துகளை கேட்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கட்சிக்குள் மறுசீரமைப்பு அவசியம் என வலியுறுத்திய மு.க. ஸ்டாலின், முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட முடியாதவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் கடுமையாக எச்சரித்தார்.
மேலும், கட்சித் தொண்டர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய தனியான இணையதளம் தொடங்கப்படும் என்றும், அதில் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் கட்சி கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்த ஆய்வுக்குழுவுக்கு யார் தலைமை வகிப்பார்கள் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
