புதுச்சேரியில் நடிகர் கே.பி பாலா பெயரை பயன்படுத்தி, கல்வி உதவி என்ற பெயரில் ரூ.18,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, கே.பி பாலா பெயரில் இன்ஸ்டாகிராம் வழியாக குறுந்தகவல் வந்துள்ளது. அதில், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நிதி உதவி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை உண்மை என நம்பிய அவர், ரூ.18,000-த்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர் சந்தேகம் ஏற்பட்டதால் அவர் விசாரணை மேற்கொண்டபோது, நடிகர் பெயரில் மர்ம நபர்கள் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபலங்களின் பெயரில் சமூக வலைதளங்களில் வரும் கணக்குகளை சரிபார்க்காமல் பணம் அனுப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
