தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக, திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மல்லை சத்யா, தனது ஆதரவுக் கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
மதிமுகவில் இருந்து விலகி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மல்லை சத்யா, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தங்களது கட்சி திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக ஆதரவளிப்பதுடன், கடுமையாகக் களப்பணியாற்றும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாகக் கூறப்படும் நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற 21 நாட்களுக்குள், வாக்காளர்களின் விரலில் வைக்கப்பட்ட மை கூட காய்வதற்கு முன்பாக, தங்களது சுயலாபத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதாக மல்லை சத்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 நாட்களுக்குள், விரலில் வைக்கப்பட்ட மை காய்வதற்கு முன்பாகவே, தனது சுயலாபத்திற்காக ராஜினாமா அரங்கேற்றத்தைச் செய்து, மிகப்பெரிய ஜனநாயக விரோதப் போக்கைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடித்துள்ளனர். இதை நாட்டு மக்களும் வாக்காளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை நிலவி வருவதாகவும், மக்கள் மற்றும் வாக்காளர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசி வருவதாகவும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மல்லை சத்யா மதிமுக சார்பில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் 3,570 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது தான் போட்டியிட்ட அதே தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், திமுக வேட்பாளரின் வெற்றிக்காக தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாகக் களப்பணியாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவுடன் அதிமுகவும், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் தீவிரமாகக் களம் காண்கின்றன. இந்த அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள திமுகவும் தேர்தல் களத்தில் தீவிரமாகப் போராடி வருகிறது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள சூழலில், திமுக தனது தேர்தல் பலத்தை நிரூபிக்கும் வகையில் திராவிட வெற்றிக் கழகம் மட்டுமின்றி, இந்தியக் குடியரசுக் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட சிறு கட்சிகளையும், பல்வேறு தலித் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.
இதனிடையே, மதிமுகவும் கரைந்து காணாமல் போகும் நிலையில் இருப்பதாக மல்லை சத்யா விமர்சித்துள்ளார். மேலும், மதிமுக திமுக கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சி தனது மகனுக்காக மட்டுமே செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகமும் மல்லை சத்யாவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. திமுக பதற்றமடைந்துள்ளதாகவும், “பொய் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டது” என்றும் தவெக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளப் பதிவில், போராட்டம் என்ற பெயரில் யாருமே இல்லாத டீக்கடையில் திமுகவினர் டீ ஆற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளது. மேலும், “ரிடென்ஷன் காப்பி எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமா என்ற கதையை திமுகவினர் கட்டவிழ்த்து விடுவதாகவும் தவெக கடுமையாகச் சாடியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மல்லை சத்யா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது, ஏற்கனவே பரபரப்பான தேர்தல் களத்தில் புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் திமுக தனது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளுடன் களமிறங்கியுள்ளது. இந்தச் சூழலில் மல்லை சத்யாவின் ஆதரவு இடைத்தேர்தல் முடிவுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
