https://republictn.com/

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதி தற்போது ஒரு தீராத தலைவலியாக மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய சொந்த கோட்டையிலேயே தமிழக வெற்றி கழக வேட்பாளரிடம் சுமார் 8,800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதாக கூறப்படும் நிலையில், அவர் இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் 2011 கொளத்தூர் தேர்தல் வழக்கு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியைப் பார்த்தால், 2011ஆம் ஆண்டு ஸ்டாலின் பெற்ற வெற்றியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இறுதிக்கட்ட விசாரணையை எட்டியது. நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அடங்கிய அமர்வு அனைத்து வாதங்களையும் கேட்டுத் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

ஒட்டுமொத்த தமிழகமும் இந்த தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கிலிருந்து தாங்கள் விலகுவதாகவும், புதிய அமர்வின் கீழ் வழக்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டும் என்றும் இரு நீதிபதிகளும் அறிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நடைமுறையின்படி, ஒரு வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர் ஓய்வு பெறும் நிலை இருந்தால் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்படும். ஆனால் இங்கு நீதிபதி ஜே.கே. மகேஸ்வரிக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கும் நிலையிலேயே இந்த விலகல் முடிவு ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே பிப்ரவரி விசாரணையின் போது, சைதை துரைசாமி தரப்பிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இப்போது வழக்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்பட உள்ளதால், அ.தி.மு.க. தரப்பு புதிய ஆதாரங்களை முன்வைக்குமா அல்லது வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2026 அரசியல் சூழலில், ஸ்டாலினின் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வெற்றியும் மீண்டும் சட்ட சிக்கலில் சிக்கியிருப்பது திமுக தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகளை அரசியல் வட்டாரம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago