பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பைப் பாதுகாக்கும் சீனாவின் முயற்சிகள், அந்நாட்டின் நற்பெயரையும், மதிப்பையும் பாதிக்கிறதா என்பது குறித்து சீனா சிந்திக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ள.
டெல்லியில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் பேசுகையில், ”மே 2025-ல் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்புக்கொண்டது குறித்து அவரிடம் கேள் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ” பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததை சீனா ஒப்புக்கொண்டது. பயங்கரவாத உள்கட்டமைப்பைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது தங்களின் நற்பெயரையும் மதிப்பையும் பாதிக்கிறதா என்பதை, தங்களைப் பொறுப்புள்ளவர்களாகக் கருதும் நாடுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்,” என்று ஜெயஸ்வால் கூறினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு, சிந்தூர் நடவடிக்கை ஒரு “துல்லியமான மற்றும் திட்டமிடப்பட்ட” பதிலடி என்று அவர் விளக்கினார். “பாகிஸ்தானில் இருந்து அதன் கட்டளைப்படி செயல்படும், அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்கும் நோக்கில், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சிந்தூர் நடவடிக்கை ஒரு துல்லியமான, இலக்கு வைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட பதிலடி. 2025, மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத இடங்கள் மீது தாக்குதல் நடத்தி, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றன.
இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்யுமாறு பாகிஸ்தான் கோரியதை அடுத்து, மே 10 அன்று மோதல் முடிவுக்கு வந்தது. இந்தியா இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போதும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தற்காலிகமாக “இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்று அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. ஜூலை 4 அன்று, லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், இந்த மோதலின் போது சீனாவின் தீவிரப் பங்கை முதன்முதலில் வெளிப்படுத்தினார். “டிஜிஎம்ஓ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது, நமது படைக் குவிப்பு குறித்த நேரடித் தகவல்களை பாகிஸ்தான் சீனாவிலிருந்து பெற்றுக்கொண்டிருந்தது. எனவே, அந்த விஷயத்தில் நாம் உண்மையிலேயே வேகமாகச் செயல்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று லெப்டினன்ட் ஜெனரல் சிங் FICCI நிகழ்வில் கூறினார்.
இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்த நேரலைத் தரவுகளை சீனா பாகிஸ்தானுடன் பகிர்ந்தது. துருக்கி ஆளில்லா விமானங்களை வழங்கியது. இச்சண்டையின்போது, பாகிஸ்தானுக்கு ‘Bayraktar’ ரக ஆளில்லா விமானங்களை வழங்கியதன் மூலம் துருக்கியும் இதில் ஈடுபட்டிருந்தது என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். கடந்த வாரம், ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி, அந்நாட்டின் அதிநவீன போர் விமானங்கள், ஆளில்லா வான்வழி வாகனங்களை உருவாக்கும் முக்கிய நிறுவனமான ‘சீன விமானத் தொழில் கழகத்தின் செங்டு விமான வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்களுடனான நேர்காணல்களை ஒளிபரப்பியது.
அந்தப் பொறியாளர்களில் ஒருவரான ஜாங் ஹெங் நான்கு நாட்கள் நீடித்த அந்த மோதலின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது குறித்துப் பேசினார். “ஆதரவுத் தளத்தில் இருந்தபோது, போர் விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து செல்லும் இரைச்சலையும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் உரக்க ஒலிப்பதையும் நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தோம்,” என்று ஜாங் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கிறது. “காலைப்பொழுதின் பிற்பகுதியில், வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கிக்கொண்டிருந்தது. அது உடல்ரீதியாக மிகவும் சோர்வூட்டுவதாகவும், மனரீதியாக மிகுந்த நெருக்கடி நிறைந்ததாகவும் இருந்தது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
