உங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலை இருக்கிறதா? அவர்களின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்குப் பணம் எங்கே என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்கள்.
தமிழக அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், உங்கள் மகள்களின் எதிர்காலத்துக்கு ஒரு மிகப்பெரிய அரணாக விளங்குகிறது.
தற்போது 2026–27 ஆம் நிதியாண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், உங்கள் வீட்டின் தேவதைகளின் பெயரில் அரசாங்கமே ஒரு பெரிய தொகையை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அந்தக் குழந்தையின் பெயரில் ₹50,000 டெபாசிட் செய்யப்படும். ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்கு தலா ₹25,000 வீதம், மொத்தம் ₹50,000 வழங்கப்படும். சில சிறப்பு நேர்வுகளில் மூன்று பெண் குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்கு தலா ₹25,000 வீதம், மொத்தம் ₹75,000 வரை அரசாங்கம் முதலீடு செய்யும்.
இந்தத் தொகை, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது வட்டியுடன் சேர்த்து ஒரு பெரிய தொகையாக திரும்ப வழங்கப்படும். ஆனால் இதில் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. அந்தப் பெண் குழந்தை 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். அப்போதுதான் முதிர்வு தொகையை பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர் சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-ஐ மீறக்கூடாது. குடும்பத்தில் ஆண் வாரிசு இருக்கக்கூடாது. மேலும் பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது அருகாமையில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்று, பெற்றோர் வயது சான்று, வருமானச் சான்று மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சான்று உள்ளிட்ட ஆவணங்களை சரியாக இணைக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், இந்தத் திட்டத்திற்காக எந்த ஒரு இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற வேண்டாம் என்பதே.
அரசு வழங்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் பெண் குழந்தைகளின் வாழ்வை ஒளிமயமாக்குங்கள்.
