சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பங்களின் LPG சிலிண்டர் செலவுகளை கண்காணிக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த விதிமுறைகள் 2022ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டிருந்தாலும், அவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. தற்போது அவற்றை மீண்டும் கடுமையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
IOC, BPCL, HPCL உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் LPG நுகர்வோரின் தரவுகளை வருமான வரித்துறை பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியைத் தொடங்கியுள்ளன. நுகர்வோர் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வருமான விவரங்கள் மற்றும் பொருளாதார நிலை தொடர்பான தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
இதன் மூலம், மானிய வசதி உண்மையில் தேவையுடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. வறான முறையில் மானியம் பெறுபவர்களை கண்டறியவும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். சரிபார்ப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, வருமான அடிப்படையில் பிரிவுகள் (slab) அமைக்கப்பட்டு, அதன்படி LPG சிலிண்டர் விலை மற்றும் மானியத் தொகை நிர்ணயிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பெட்ரோலியத் துறை இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் விவரங்களை வருமான வரித்துறையிடம் எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.928.50-க்கு விற்கப்படும் நிலையில், 23 ரூபாய் மானியமாக தரப்படுகிறது.
