https://republictn.com/

தன்னுடைய எட்டு வயது மகனை உடல் ரீதியாகத் துன்புறுத்திய கும்பலிடமிருந்து தப்பித்த சம்பவத்தை தமிழ் சினிமாவில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் ஒருவரின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், “வாழ்நாளில் முதன்முறையாக நேற்று இரவு 8.20 மணியளவில் எனக்கு காவல்துறை உதவி தேவைப்பட்டது.

என் எட்டு வயது மகனை இருவர் உடல் ரீதியாகத் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். சற்று தூரத்தில் நடைப்பயிற்சியில் இருந்த நான், உடனடியாக அங்கு ஓடிச் சென்று தடுத்து நிறுத்தி அவர்களிடம் விளக்கம் கேட்டேன்.

அந்த இடத்தில் மின் விளக்குகளும் கண்காணிப்பு கேமராக்களும் செயலிழந்த நிலையில் இருந்தன. அவை வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது. மேலும், அது இருள் சூழ்ந்த விளையாட்டு மைதானமாக இருந்ததால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது.

அப்போது 10 முதல் 12 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் எங்களைச் சூழ்ந்துகொண்டது. அவர்களின் வயது சுமார் 15 முதல் 20 வரை இருக்கலாம். பதற்றமடைந்த நான், என் மகனின் தோளைத் தொட்டபோது, அவன் அச்சத்தால் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

வேறு வழியின்றி, எங்களைச் சூழ்ந்திருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்தபடியே அவசர உதவி எண்ணான 100-ஐ தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நீண்ட நேரம் காத்திருந்த பிறகு ஒரு ரிங் சென்று, அழைப்பு ஏற்கப்பட்டதும் உடனடியாக துண்டிக்கப்பட்டது போல தொடர்பு அறுந்துவிட்டது.

அருகிலிருந்த ஆர்-6 குமரன் நகர் காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அந்த எண் பயன்பாட்டில் இல்லை என்ற தகவலே கிடைத்தது.

என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடிய, உயிர் பாதுகாப்பு இல்லாத சூழலில் நாங்கள் இருந்தோம். இறுதிவரை காவல்துறையைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எந்த அசம்பாவிதமும் இன்றி நானும் என் மகனும் அங்கிருந்து பாதுகாப்பாக மீண்டது இறைவனின் அருளால்தான்.

மற்றபடி, நாட்டில் சட்டம்-ஒழுங்கும் காவல்துறையும் இருக்கிறதா என்ற கேள்வியே எனக்குள் எழுகிறது” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பார்த்த சமூக வலைதள பயனர்கள் பலரும், அவரது மகனுக்கு ஆறுதல் தெரிவித்து, பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இணை இயக்குநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 hours ago at 21 hours ago