திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் விரலை எலிகள் கடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் (கல்கண்டார்கோட்டை) பகுதியைச் சேர்ந்த தமிழ்க்கொடி (68) என்பவர், வீட்டில் தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜூலை 20-ஆம் தேதி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்க்கொடி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் காலில் உணர்வு குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் வார்டுக்குள் சுற்றித்திரிந்த எலிகள் அவரது காலில் கட்டுப் போடப்பட்டிருந்த கட்டை விரலைக் கடித்து கடுமையாக சேதப்படுத்தியதாகத் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் கூறுகையில், “வியாழக்கிழமை அதிகாலை என் தாய்க்கு தேநீர் கொடுக்கச் சென்றபோதுதான், அவரது கால் விரல் சிதைந்து ரத்தம் வடிந்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வார்டில் எலித் தொல்லை இருப்பதாக ஏற்கனவே பலமுறை மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தெரிவித்திருந்தோம். ஆனால், அதனை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
எலி கடித்ததில் மூதாட்டியின் கால் கட்டை விரல் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு தேவையான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை வழங்கியதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அரசியல் ரீதியிலும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், தமிழக அரசையும் சுகாதாரத் துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், “நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அரசை நம்பி மருத்துவமனைக்கு வந்த ஒரு பெண் எலி கடித்ததால் தனது கால் விரலை இழந்துள்ளார். இதற்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக உயர்தர மருத்துவ சிகிச்சையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ள ‘Blastu Blastu’ என்பது, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்ததாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரபலமான பாடல் வரியாகும். அந்தப் பாடலை உவமையாகப் பயன்படுத்தி, மக்கள் நலப் பிரச்சினைகளைப் புறக்கணித்து, அரசு மற்றும் அமைச்சர்கள் திரைப்பட வெளியீட்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், “மக்கள் துயரத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்து கொண்டாடியதாக தகவல்கள் வெளியாகின்றன. முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் திரைப்பட வெளியீட்டில் கவனம் செலுத்தி, மக்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்து வருகிறார்கள்” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், அரசு மருத்துவமனைகளின் சுகாதார பராமரிப்பு, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அலட்சியம் குறித்து மாநிலம் முழுவதும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
