புதுச்சேரி, நல்லவாடு வடக்கு மீனவர் கிராமத்தில் தில்லையம்மன் கோவில் உள்ளது. அந்தக் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் ஒரு பகுதியாக பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது.
முன்னதாக நல்லவாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் தொகுதி தவெக எம்.எல்.ஏ., ராமு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அவருக்காக தவெக தலைவர் விஜயின் “நான் தன்னந்தனி ஆளு..” பாட்டு ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாயத்தார் முன்னிலையில் பால்குடம் வீதி உலா தொடங்கியது. வீதி உலாவில் சாமி பாடலுக்கு பதிலாக “ஓட்டடா ஓட்டடா கம்பத்தில..” பாட்டு ஒளிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்திற்கு முன்பு சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், ஆண்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் குத்துப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பால்குட ஊர்வலத்தையே ஆடல் -பாடல் கச்சேரியாக மாற்றினர். இதில், கலந்துகொண்ட இளம் பெண்கள், இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து பால் குடத்தை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
முடிவில் தில்லையம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை நல்லவாடு வடக்கு தில்லையம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் நடைபெற்ற டிஜே இசைக்கு ஏற்ப மழையில் நடனம் ஆடி மகிழ்ந்தனர். பால்குட ஊர்வலத்தில் இளைஞர்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
