Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய VB-G RAM G திட்ட வழிகாட்டுதல்களில் பல்வேறு தளர்வுகள் மற்றும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மகாத்மா காந்தியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புதிய திட்ட வழிகாட்டுதலின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கான நிதிப் பகிர்வு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றத்தால் தமிழக அரசுக்கு ரூ.5,000 கோடிக்கும் மேல் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்பதால், கட்டுமானப் பொருட்களுக்கான நிதிப் பகிர்வை 75:25 என்ற விகிதத்தில் மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கான 100 சதவீத நிதியுதவியையும் மத்திய அரசே தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய வழிகாட்டுதலின்படி, முதன்மை விதைப்பு மற்றும் அறுவடை காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு முன்கூட்டியே நிர்ணயிக்க வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எல் நினோ போன்ற கணிக்க முடியாத பருவநிலை மாற்றங்களால், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப அந்த 60 நாள் முதன்மைப் பருவத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களே மாற்றி அறிவிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் வீட்டுவசதித் திட்டங்களுடன், மாநில அரசின் சொந்த நிதியில் செயல்படுத்தப்படும் வீட்டுவசதித் திட்டங்களையும் இணைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் மாவட்ட அளவிலான தேவைகளை கருத்தில் கொண்டு, மாநிலங்கள் தங்களுக்கேற்ற நிதிப் பகிர்வு மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளை உருவாக்கும் வகையில் அதிக நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மொத்தத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றாமல் தொடர்வதுடன், மாநிலங்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் புதிய திட்ட விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago