திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் ஆகியோரின் காதல் முறிவு குறித்த வதந்திகள், இருவரும் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
பைசன் காலமாடன் திரைப்படத்தில் இணைந்து நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கும் துருவ் விக்ரமுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கடந்த சில காலமாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இருவரும் தங்களது உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள அவர்களது பேட்டிகள் இந்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.
முன்னாள் காதலன் குறித்து மனம் திறந்த அனுபமா
சமீபத்திய யூடியூப் நேர்காணலில் அனுபமா பரமேஸ்வரன், தனது கடந்த கால இரண்டு ஆண்டுகால காதல் உறவு குறித்து மனம் திறந்து பேசினார். முன்னாள் காதலரின் பெயரை குறிப்பிடாத அவர், ஒரு நாள் ரெமோ போல அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்தும் நபர், மறுநாள் அந்நியன் போல முற்றிலும் மாறுபட்டு மனரீதியாகத் துன்புறுத்துவார் எனக் கூறினார்.

அவரது மனநிலை மாற்றங்களால் அச்சத்துடனும் மன அழுத்தத்துடனும் வாழ்ந்ததாகவும், தனது சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் சினிமா வாழ்க்கையிலும் முன்னாள் காதலர் கட்டுப்பாடு செலுத்த முயன்றதாகவும் அனுபமா மறைமுகமாகக் குற்றம்சாட்டினார். இந்த அனுபவத்தை அவர் ‘நார்சிசிஸ்டிக் அப்யூஸ்’ எனக் குறிப்பிட்டது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை”
இதற்கிடையே, அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அவர் துருவ் விக்ரமை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருந்த ஒரு பதிவும் பேசுபொருளானது.
“இனி புகைப்படங்களையும் கேப்ஷன்களையும் பதிவிட எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் பதிவிட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்தப் பதிவு, அவரது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்த சமூக வலைதளக் கட்டுப்பாடுகள் குறித்த கருத்துகளுடன் இணைத்து ரசிகர்களால் பேசப்பட்டது.
துருவ் விக்ரமின் பதில் என்ன?
அனுபமாவின் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் துருவ் விக்ரமை விமர்சித்து வந்தனர். இந்தச் சூழலில், வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற துருவ் விக்ரம், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விமர்சனங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

“சினிமா தொழிலை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போதே, உங்களைப் பற்றிய பொதுமக்களின் பார்வையும் தீவிர விமர்சனங்களும் அதன் ஒரு பகுதியாக வரும் என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ள வேண்டும். இதில் அழகான பக்கம் இருப்பது போல, மறுபக்கமும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.
மேலும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் வெளியாகும் விமர்சனங்கள் தன்னை பாதிக்கவே இல்லை என்று கூறுவது உண்மையாக இருக்காது என்றும் துருவ் விக்ரம் தெரிவித்தார்.
“தனிப்பட்ட வாழ்க்கை மீதான இத்தகைய பொதுவெளி விமர்சனங்கள் என்னைப் பாதிக்கவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறியிருந்தார்.
அதேநேரத்தில், உண்மை மற்றும் நிஜ வாழ்க்கையுடன் நாம் இணைந்திருக்கும்போது, இதுபோன்ற வதந்திகள் நம்மை பெரிதாக பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஒரு தனிப் படையாக நிற்கப் பழகிக் கொள்கிறீர்கள்”
இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, ஒருவர் தனக்காகத் தானே நிற்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் துருவ் விக்ரம் வெளிப்படுத்தினார்.
“இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் ஒரு தனிப் படையாக (Army of One) நிற்கப் பழகிக் கொள்கிறீர்கள். உங்களை நீங்களே செதுக்கிக் கொண்டு, உங்களைச் சுற்றியுள்ள நேசிப்பவர்களையும் உங்களது தனி உலகத்தையும் பாதுகாப்பது மட்டுமே இப்போதைய முக்கிய குறிக்கோள்” என்று அவர் கூறினார்.
துருவ் விக்ரமின் இந்தப் பேச்சு, அனுபமாவின் நேர்காணலுக்கான மறைமுகப் பதிலாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அவர் தனது பேட்டியில் அனுபமா பரமேஸ்வரனின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதள பயன்பாடு குறித்து துருவ் விக்ரம்
அனுபமா தனது முன்னாள் காதலர் தன்னுடைய சமூக வலைதளப் பதிவுகளை கட்டுப்படுத்த முயன்றதாகக் கூறியிருந்த நிலையில், துருவ் விக்ரம் தனது சமூக வலைதளப் பயன்பாடு குறித்தும் பேசியுள்ளார்.
“எனக்கு வீடியோக்களை எடிட் செய்வதும், ஷூட் செய்வதும் மிகவும் பிடிக்கும். என் தந்தை சீயான் விக்ரம், என் அக்கா மகள் மற்றும் எனது செல்லப் பிராணிகளை நான் அடிக்கடி வீடியோ எடுப்பேன். அவற்றை iMovie-ல் போட்டு, இசைக்குத் தகுந்தபடி எடிட் செய்வேன். ஆனால், அவற்றை நான் வெளியில் பதிவிடுவதில்லை. எனக்காக மட்டுமே வைத்துக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களைப் பொதுச் சதுக்கத்துடன் ஒப்பிட்ட துருவ் விக்ரம், திரைப்படங்களின் விளம்பரப் பணிகள் இருக்கும்போது மட்டுமே தான் இன்ஸ்டாகிராமில் அதிகமாகச் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
“சமூக ஊடகங்கள் என்பது உலகத்தின் பொதுச் சதுக்கம் போன்றது. எனது படங்களின் விளம்பரங்கள் இருக்கும்போது மட்டுமே நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பேன். மற்ற நேரங்களில் புத்தகம் படிப்பது, இசை கேட்பது என என் உலகத்திற்குள் மூழ்கிவிடுவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் சமூக வலைதளங்களில் தான் அதிகளவில் ஈடுபடுவதில்லை என்பதையும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பகிர்வதில் தனக்கென ஒரு எல்லையை வைத்திருப்பதையும் துருவ் விக்ரம் உணர்த்தியுள்ளார்.
“ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கு இருக்கிறதா?”
துருவ் விக்ரமிடம் ரசிகர்கள் நீண்ட காலமாக எழுப்பி வரும் மற்றொரு கேள்வி, அவருக்கு ரகசியமான தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு ஏதேனும் உள்ளதா என்பதுதான்.
இதுகுறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த துருவ் விக்ரம், “எனக்கு பிரைவேட் அக்கவுண்ட் இருக்கிறதா என்பது ரசிகர்களுக்கு என்றுமே தெரியாத ஒரு ரகசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிலும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இருவருமே பெயரை குறிப்பிடவில்லை
அனுபமா பரமேஸ்வரன் தனது பேட்டியில் இரண்டு ஆண்டுகால காதல் உறவு, அதில் ஏற்பட்ட வலி, மனநிலை மாற்றங்கள், உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள், சமூக வலைதளங்கள் மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து விரிவாகப் பேசியிருந்தாலும், எங்குமே துருவ் விக்ரமின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

அதேபோல், துருவ் விக்ரமும் தனது சமீபத்திய பேட்டியில் அனுபமாவின் பெயரை குறிப்பிடவில்லை. தங்களுக்குள் காதல் உறவு இருந்தது என்றோ, தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர் என்றோ அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
இதனால், இருவரின் பேட்டிகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்ப்பது இணையவாசிகளும் ஊடகங்களும்தான்.
வதந்திகளுக்கு மத்தியில் துருவின் கடற்கரை வீடியோ
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வந்த சூழலுக்கு மத்தியில், துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எந்தவித கேப்ஷனும் இல்லாமல் கடற்கரை வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
மாலை நேரத்தில் கடற்கரையில் அலைகள் ஓய்வெடுக்கும் காட்சிகளும், ஒரு குழந்தை கடற்கரையில் ஓடி விளையாடும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
எந்தவித விளக்கமும் அல்லது கருத்தும் தெரிவிக்காமல் அவர் அந்த வீடியோவைப் பகிர்ந்திருந்த நிலையில், சுற்றியுள்ள வதந்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் தனது மன அமைதியைப் பேணுவதையே அவர் வெளிப்படுத்தியதாக அவரது ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
உண்மையில் என்ன நடந்தது?
அனுபமா பரமேஸ்வரனும் துருவ் விக்ரமும் தங்களது தனிப்பட்ட உறவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இருவருக்கும் இடையே காதல் இருந்தது என்பதையும், தற்போது அவர்கள் பிரிந்துவிட்டனர் என்பதையும் இருவரில் யாரும் நேரடியாக உறுதி செய்யவில்லை.
அனுபமா பேசிய முன்னாள் காதலர் யார் என்பதும் அவரது பேட்டியில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், துருவ் விக்ரமின் கருத்துகளும் குறிப்பிட்ட ஒருவரைச் சுட்டிக்காட்டுவதாக அவர் கூறவில்லை.
எனவே, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும்பாலும் இருவரின் பேட்டிகளில் இடம்பெற்ற கருத்துகளை ரசிகர்களும் ஊடகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்க்கும் அடிப்படையிலான ஊகங்களாகவே உள்ளன.
இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசாத நிலையில், அனுபமாவின் குற்றச்சாட்டுகளும் துருவ் விக்ரமின் பதிலும் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இருவரில் யாரேனும் ஒருவர் எதிர்காலத்தில் நேரடியாக விளக்கம் அளிப்பார்களா என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
