தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றி, முதல்முறையிலேயே முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் தளபதி விஜய்.
35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், இந்த வெற்றியோடு திருப்தி அடைய விஜய் தயாராக இல்லை. அவரது கவனம் தற்போது அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் தவெக கட்சி வெற்றி அலை வீசியிருந்தாலும், சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் அக்கட்சியால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுக அதிக வெற்றிகளை பெற்றுள்ளன.
இந்த எட்டு மாவட்டங்களே தற்போது முதலமைச்சர் விஜயின் முக்கிய இலக்காக பார்க்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் தவெக கட்சி ஏன் தோல்வியை தழுவியது, மக்கள் செல்வாக்கு எங்கு குறைந்தது என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெறும் மாநில ஆட்சி அதிகாரம் மட்டும் போதாது, உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றினால்தான் தவெக ஆட்சி அதிகாரம் அடித்தட்டு மக்கள்வரை முழுமையாக சென்றடையும் என்று முதலமைச்சர் விஜய் நம்புகிறார்.
இதற்காக, சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அதே வேகத்துடன் உள்ளாட்சி தேர்தலையும் விரைவாக நடத்தி முடிக்க தவெக அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள், மதுக்கடைகள் மூடல், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட முந்தைய அரசுகளின் நல்ல திட்டங்களை தொடரவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
