சென்னையின் வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திரப் பதிவேடு ரவுடியான ‘பலி ஆடு’ அஜய் (20) என்பவர் நள்ளிரவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம். நகரைச் சேர்ந்த அஜய் (20), குற்றவட்டாரத்தில் ‘பலி ஆடு’ அஜய் என்ற பெயரில் அறியப்பட்டவர். இவர் மீது கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் இவர் மீது சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு அஜய் தனது திருநங்கை தோழியான காஜல் (24) என்பவரை பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இறக்கிவிட்டு, அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அதன்பிறகு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அஜயை வழிமறித்துள்ளது. மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்த கும்பல், முதலில் அவரது தலையில் சரமாரியாக தாக்கியதாகவும், கீழே விழுந்த பின்னரும் பலமுறை வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவம் திருநங்கை காஜலின் கண்முன்னே நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணாரப்பேட்டை போலீசார், அஜயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையின் பின்னணி மற்றும் அதில் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
