தமிழக காங்கிரஸ் இளைஞரணி முன்னாள் பொதுச் செயலாளர் அலிம் அல் புகாரி, திமுகவில் இணைந்தார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தவெகவுக்கு ஆதரவு அளித்ததை எதிர்த்து அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வளாகத்தில், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அலிம் அல் புகாரி திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த விஷயத்திலும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து பேசாமல், ‘பாஜக’ என்ற வார்த்தையையே சொல்ல அஞ்சும் ஒருவருடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தது தவறு என்று தொடர்ந்து நான் கூறி வந்தேன். அந்த இடைக்கால நடவடிக்கையைத் தொடர்ந்து நானே முன்வந்து ராஜினாமா செய்தேன்.
இன்றைய தினம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
