தமிழக மக்கள் சரியான அரசியல் முடிவை எடுத்துள்ளதாகவும், முதலமைச்சர் விஜய்யின் அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டுவதாகவும் நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனது புதிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ (Toxic) படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் பேசிய அவர், தமிழக மக்கள் சிந்தித்து சரியான முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெற்றதாகத் தான் கேள்விப்பட்டதாகக் கூறிய யாஷ், மக்கள் முதலமைச்சர் விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவே அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முழுத் தகுதியும் திறமையும் விஜய்க்கு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“முதலமைச்சர் விஜய்க்கு இந்தப் பொறுப்பை ஏற்கும் அனைத்து தகுதிகளும் உள்ளன. அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார்” என்று யாஷ் பாராட்டினார்.

சினிமாவில் இருந்து மக்கள் சேவைக்கு விஜய் வந்திருப்பது புதிய உத்வேகத்தையும், முற்போக்கான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் யாஷ் கூறினார். தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தைப் பார்த்து இந்தியாவிலும், உலக அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
விஜய்யின் அன்றாட அரசியல் பணிகள் குறித்து ‘டாக்ஸிக்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே. வெங்கட் நாராயணா தன்னிடம் பலமுறை கூறியதாகவும் யாஷ் தெரிவித்தார். “விஜய் சார் காலையில் இருந்து இரவு வரை தமிழ்நாட்டு மக்களுக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் பணியாற்றுகிறார் என்பதை வெங்கட் சார் என்னிடம் அடிக்கடி கூறுவார்” என்று அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து தாங்கள் நிறைய கற்றுக்கொண்டதாகவும் யாஷ் கூறினார். ஒரு நடிகராக மக்கள் அளிக்கும் அன்பை திருப்பிக் கொடுக்கும் சரியான கட்டத்தை விஜய் எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக ரசிகர்கள் தனக்கு அளிக்கும் அன்பு குறித்துப் பேசிய யாஷ், “தமிழக மக்கள் என்னைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளனர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். சென்னைக்கு வரும்போதெல்லாம் வேறு மாநிலத்துக்கு வந்தது போன்ற உணர்வு ஏற்படுவதில்லை என்றும், சொந்த வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வும் பாதுகாப்பும் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதன் காட்சிகள் இணையத்தில் கசிவது வழக்கமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் விஜய் மற்றும் சினிமா மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரகசியங்களை வெளியிடாமல் பாதுகாத்ததாக யாஷ் பாராட்டினார். படைப்பாளிகளுக்கு தமிழ் மக்கள் அளித்த இந்த மரியாதைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து, “நீங்களும் விஜய்யைப் போல் அரசியலுக்கு வருவீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் யாஷிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நடிகராக நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. தற்போதைக்கு எனது முழுக் கவனமும் சினிமாவில்தான் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய உண்மையான தேவையும் கட்டாயமும் ஏற்பட்டால், அப்போது அரசியலுக்கு வருவது குறித்து யோசிப்பேன்” என்று தெரிவித்தார்.
யாஷின் அரசியல் குறித்த கருத்துகள் விழாவில் கவனம் பெற்ற நிலையில், தமிழக அரசியல் தொடர்பான அவரது பாராட்டும் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள பான்-இந்திய திரைப்படமான ‘Toxic: A Fairytale for Grown-ups’ ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாஷ் திரைக்கு வருவதால், இப்படத்தின் வெளியீட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அட்வான்ஸ் புக்கிங்கிலும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ₹45 கோடிக்கும் மேல் முன்பதிவு வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், புக் மை ஷோவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘கே.ஜி.எஃப் 2’ படத்திற்குப் பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து யாஷ் மீண்டும் திரைக்கு வருவதால், ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் நாள் வசூல் மற்றும் தொடக்க வரவேற்பை இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.
