காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பொன்னேரிக்கரை காவல் நிலையம் முன்பாகவும், சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் பொன்னியம்மன் எனப்படும் மாரியம்மன் கோயிலின் ஆடித் திருவிழா நடைபெற்று வந்தது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு இசைக் கச்சேரி மற்றும் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே மேடையில் கானா பாடல்களைப் பாடுவது மற்றும் ஒலிபரப்புவது தொடர்பாக நள்ளிரவில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் மதுபோதையில் வந்த ஒரு கும்பல், ஒலிபெருக்கியில் தங்களுக்குப் பிடித்த திரைப்படப் பாடல்களை, குறிப்பாக கானா பாடல்களை ஒலிபரப்புமாறு தகராறு செய்ததாகவும், இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தகராறு ஏற்பட்ட உடனேயே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர், போலீஸார் அங்கிருந்து சென்ற நிலையில், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் விக்கி என்கிற நீலகண்டன் மற்றும் சந்துரு ஆகிய இருவரும் தங்களது வீட்டின் அருகே உள்ள ஒரு வெற்றிடப் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, இருசக்கர வாகனங்களில் திடீரென வந்த மர்மக் கும்பல், இருவரையும் சுற்றிவளைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவிழாவையொட்டி அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும் இந்தத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆரம்பத்திலேயே போலீஸார் முறையான தடுப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பொன்னேரிக்கரை காவல் நிலையம் முன்பாகவும், சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அசம்பாவிதங்கள் மேலும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், படுநெல்லி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், தப்பியோடிய மர்மக் கும்பலைப் பிடிப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இரட்டைக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலைமை மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்வேறு மாவட்டங்களில் 5 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் படுநெல்லி கிராமத்தில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருவதுடன், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
