பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான தண்டாயுதபாணி மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் தொடர்பான பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறையில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் நேற்று இரவு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
அன்வர்தீனின் உயிரிழப்பு தொடர்பாக சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
