தேனி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கடமலை–மயிலை வன உரிமைக் குழுக்கள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), இடதுசாரி அமைப்புகள் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததால், இந்தப் போராட்டம் தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் போராட்டத்தின் பின்னணியைப் பொறுத்தவரையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை, வருசநாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது ஊராட்சிகளுக்குட்பட்ட 98 கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
மூன்று மற்றும் நான்கு தலைமுறைகளைத் தாண்டியும் அதே பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள், விவசாயம் மற்றும் வன வளங்களை நம்பியே தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 98 கிராமங்களில் மட்டும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
மேகமலை வனப்பகுதி கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கப்பட்டு, மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகே அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, அங்கு வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருதி வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள், “நாங்கள் நேற்று வந்தவர்கள் அல்ல. மூன்று, நான்கு தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வரும் எங்களை ஒரே வார்த்தையில் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றுவது எப்படி நியாயமாகும்?” என்று கேள்வி எழுப்பினர். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மேகமலை மற்றும் வருசநாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை முதலே மக்கள் பெருமளவில் திரண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு சாலைகளில் மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தனர். முதலில், ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டும் என்றனர்.
இரண்டாவதாக, 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை மற்றும் விவசாய நிலங்களுக்கான பட்டாக்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மூன்றாவதாக, வெளியேற்ற நடவடிக்கைக்கு வழிவகுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் பேசிய கிராம மக்கள், “எங்களிடம் ரேஷன் அட்டைகள் உள்ளன. பல ஆண்டுகளாக அரசின் ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறோம். எங்களுக்காக அரசு பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவ வசதிகளும் உள்ளன. தேர்தல்களில் தொடர்ந்து வாக்களித்து வருகிறோம்.
ஒரு இந்தியக் குடிமகனாக இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் இருக்கும்போது, எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களை வெளியேற்ற முயற்சித்தால் அதனை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்,” என்று தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் முழு ஆதரவு தெரிவித்தன. பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக, 2006 வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களது உரிமைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மக்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, வனப்பகுதியில் வசித்து வரும் மக்களை உடனடியாக வெளியேற்றாமல் இருக்கவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், அதுவரை எந்தவித வெளியேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என்றும் அரசுத் தரப்பில் தற்காலிக உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த உறுதி மட்டும் போதாது என்றும், தங்களது வாழ்வுரிமைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து, வீட்டுமனை மற்றும் விவசாய நிலங்களுக்கான பட்டாக்கள் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் கிராம மக்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக மேகமலை மற்றும் வருசநாடு மலைப்பகுதி மக்களின் வன உரிமை, நில உரிமை மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு தொடர்பான இந்தப் பிரச்சினை, தமிழ்நாட்டின் முக்கியமான மக்கள் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
