தமிழக சட்டப்பேரவையில் அரங்கேறியுள்ள காட்சிகள், முதல்வர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் பல விவாதங்களை கிளப்பியுள்ளன. குறிப்பாக, அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதியான எடப்பாடி பழனிசாமியை விஜய் நடத்திய விதம், திமுக தலைவர்களுடன் அவர் காட்டும் நெருக்கம் ஆகியவற்றிற்கு பின்னால் மாபெரும் அரசியல் கணக்குகள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் ‘டபுள் கேம்’
தமிழக அரசியலில் ‘மாண்பு’ என்பது மிக முக்கியமானது. நான்கு ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றியவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், வயதில் மூத்தவர் என்கிற அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்குள் காட்டிய பண்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. அவர் முதல்வர் விஜய்யையும், அவையினரையும் பணிவுடன் வணங்கினார். ஆனால், பதிலுக்கு ஒரு சிறு வணக்கம் கூட சொல்லாமல் முதல்வர்ர் விஜய் காட்டிய பாராமுகம், அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திமுக பாசத்தின் மர்மம்
தேர்தல் களம் வரை திமுகவை ‘குடும்ப அரசியல்’ என்று சாடிய விஜய், வெற்றி பெற்றவுடன் ஸ்டாலினையும், உதயநிதியையும் தேடிச் சென்று சந்திப்பது ஏன்? இதன் பின்னணியில் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கும் பெரும் கணக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று விஜய்க்கு ஆதரவு தரும் விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் தயவில்தான் இந்த ஆட்சி நீடிக்கிறது. ஸ்டாலின் ஒரு சிறிய சமிக்ஞை காட்டினாலும், இந்தக் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறக்கூடும். அப்படி நடந்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்கிற அச்சமே விஜய்யை ஆழ்வார்பேட்டை நோக்கி ஓட வைக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எடப்பாடியை ஒதுக்கக் காரணம் சி.வி.சண்முகமா?
எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் மரியாதை தராததற்குப் பின்னால் மற்றொரு திட்டமும் இருக்கலாம். அதிமுக தற்போது எடப்பாடிக்கு எதிராக சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு பிரிவாக உடையும் நிலையில் உள்ளது. ஒருவேளை திமுக கூட்டணி கட்சிகள் கைவிட்டால், எடப்பாடி தலைமையிலான அதிமுகவை அணுகுவதை விட, அதிலிருந்து பிரிந்து வரும் சி.வி.சண்முகம் அணியை அரவணைத்துக் கொள்வது சுலபம் என விஜய் நினைக்கலாம்.

பறிபோகும் மாண்பு?
அரசியலில் கொள்கை ரீதியாக மோதல்கள் இருக்கலாம். ஆனால், ஒரு சபைக்குள் நுழையும்போது மூத்த தலைவருக்குத் தர வேண்டிய அடிப்படை மரியாதையைக் கூட தராமல் “திமிர்” காட்டுவது, விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. ஸ்டாலினின் பிடியில் இருக்கும் கட்சிகளை நம்பாமல், அதிமுகவின் ஒரு பகுதியை உடைக்கத் துடிக்கும் இந்த நகர்வுகள், நீண்ட காலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைத் தருமா என்பது கேள்விக்குறியே.
மரியாதை என்பது கொடுக்கல் வாங்கல் சார்ந்தது. அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும்போது காட்டும் அலட்சியம், வரும் காலங்களில் பின்னடைவாக மாறக்கூடும். ஸ்டாலினைப் பார்த்துப் பம்முவதும், எடப்பாடியைப் பார்த்துத் தும்முவதும் விஜய்யின் அதிகாரப் பசியின் வெளிப்பாடே தவிர, மக்களாட்சியின் மாண்பு அல்ல என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
