“ஊழல் இல்லாத அரசாங்கத்தைக் கொடுப்போம்னு சும்மா மேடையில மட்டும் பேசிட்டுப் போக நான் வரல; அதைச் செயல்ல காட்டத்தான் வந்திருக்கேன்” எனத் தனது அமைச்சரவைக்கே மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்து, தலைமை செயலகத்தை அதிர வைத்துள்ளார் முதல்வர் விஜய். தவறு செய்யும் அமைச்சர்களின் பதவி ‘அடுத்த நிமிஷமே’ பறிக்கப்படும் என்றும், இன்னும் ஓரிரு மாதங்களில் அதிரடியான அமைச்சரவை மாற்றம் அரங்கேறப் போவது உறுதி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெட்ட பெயர் ஏற்படுத்தினால்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே நிர்வாகத்தில் பல்வேறு அதிரடிகளை முதல்வர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் உடனான ஆலோசனையின் போது முதல்வர் விஜய் மிகவும் கறாரான தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
“நம்ம ஆட்சியில ஊழல் இல்லைங்கிறதை மக்கள் இப்போதான் நம்ப ஆரம்பிச்சிருக்காங்க. அதை உணரவும் தொடங்கி இருக்காங்க. இந்தச் சூழல்ல, அரசோட பெயரைக் கெடுக்கிற மாதிரியான காரியத்தை யார் செஞ்சாலும், அவங்க என் பக்கத்திலேயே இருக்க முடியாது” என முகத்திற்கு நேராகவே எச்சரித்துள்ளார். மேலும், “உங்களுக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமான்னா? எனக்கு மக்கள்தான் முக்கியம்” எனத் தன் நிலைப்பாட்டை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.

உளவுத்துறை வளையத்தில் 5 அமைச்சர்கள்?
முதல்வர் விஜய் இவ்வளவு கடுமையான அஸ்திரத்தைக் கையில் எடுத்ததற்குக் குறிப்பிட்ட சில பின்னணிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல், முறைகேடு புகார்கள் ஆதாரங்களுடன் முதல்வரின் தனிப்பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனவாம். இதில் தவெக-வைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமின்றி, ஒரு முக்கியக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் பெயரும் அடக்கம் எனக் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சர்கள் அனைவருமே தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களின் தினசரி செயல்பாடுகள், துறை சார்ந்த டெண்டர்கள் மற்றும் டீலிங்குகள் அனைத்தும் உளவுத்துறையால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
2 மாதங்களில் அமைச்சரவை மாற்றம் உறுதி
ஏற்கனவே ₹1,000 கோடி பருப்பு கொள்முதல் டெண்டர் புகாரில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் மீதும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் மீதும் யாருடைய சிபாரிசும் இல்லாமல் முதல்வர் விஜய் அதிரடி ஆக்ஷன் எடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது அமைச்சர்களுக்கும் ‘செக்’ வைக்கப்பட்டுள்ளது.
முறைகேடு புகாரில் சிக்கிய அந்த 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படலாம் அல்லது அவர்கள் அமைச்சரவையில் இருந்தே முழுமையாக நீக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. அநேகமாக இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய ரீ-ஷஃபிள் நடப்பது உறுதி என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.
மேடை அரசியல் தாண்டி, நிர்வாகத்திலும் முதல்வர் விஜய் காட்டி வரும் இந்த ‘ஸ்ட்ரிக்ட்’ முகம், தவறு செய்ய நினைக்கும் மற்ற அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும் கலக்கமடையச் செய்துள்ளது.
