தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து நிர்வாகக் காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், தலைமை செயலகத்தையும் தாண்டி, தவெக-வின் தலைமை அலுவலகத்தில் ஒருவித பதற்றமான அமைதி நிலவுகிறது. காரணம், முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் இரண்டு பிரம்மாண்ட வழக்குகள் தான்.
“சிஎம்க்கு நெருக்கமானவர்கள் இந்த ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து அவரிடம் கொண்டு சேர்த்தார்களா? அல்லது வழக்கம்போல அலட்சியமாக இருந்துவிட்டார்களா?” என்ற காரசாரமான விவாதம் தவெக-வின் சீனியர்கள் மத்தியில் இப்போதே வெடிக்கத் தொடங்கியுள்ளது.
கத்தி 1: வேட்புமனு குளறுபடி
முதலமைச்சர் விஜய்க்கு எதிராக இருக்கும் முதல் மற்றும் மிக ஆபத்தான கத்தி — வேட்புமனு தாக்கல் விவகாரம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனது சொந்தத் தொகுதியான பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதில், அவர் தாக்கல் செய்த சத்தியப்பிரமாணப் பத்திரங்களில் ஏகப்பட்ட முரண்பாடுகளும், ஏடாகூடங்களும் அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பெரம்பூர் தொகுதியில் சமர்ப்பித்த சொத்து விபரப் பட்டியலுக்கும், திருச்சி கிழக்கில் கொடுத்த பட்டியலுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், தனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து விபரங்களை விஜய் திட்டமிட்டு மறைத்துள்ளார் என்றும் எதிர்த்தரப்பு குற்றம் சாட்டுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு
பெரம்பூரில் விஜயை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாக்காளரும் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய்யின் வெற்றிக்கு எதிராக “தேர்தல் வழக்கு” தொடர்ந்துள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வேட்புமனுவில் முறையான சொத்து விபரங்களை மறைப்பது தகுதி நீக்கம் வரை கொண்டு செல்லக்கூடிய கடுமையான குற்றமாகும்.
ஆரம்பத்திலேயே இந்த லீகல் சிக்கலைக் கவனிக்காமல் கோட்டைவிட்டால், எதிர்காலத்தில் ஒட்டுமொத்தப் பதவியுமே பறிபோகும் அபாயம் இருப்பதால், தவெக-வின் சட்டப் பிரிவு வழக்கறிஞர்கள் தற்போது ‘ரூம் போட்டு’ தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

கத்தி 2: “விசில் சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்க…”
இரண்டாவது கத்தி, விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பேச்சுக்களில் இருந்து முளைத்திருக்கிறது. பிரச்சார மேடைகளில் விஜய் பேசும்போது, அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து, “உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாரையும் விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போடச் சொல்லிக் கட்டாயப்படுத்துங்க, வற்புறுத்துங்க” என்று பேசியிருந்தார்.
சட்டப்படி குற்றமா?
தேர்தல் பிரச்சாரங்களிலோ அல்லது தேர்தல் தொடர்பான பணிகளிலோ குழந்தைகளைப் பயன்படுத்துவது அல்லது அவர்களை நேரடியாக இயக்குவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி கடுமையான குற்றம். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், கடந்த ஜூலை 14-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அதிரடியான பதிலைச் சமர்ப்பித்துள்ளது. “இனிவரும் காலங்களில் இது போன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபடாதவாறு, வண்டி ஓட்ட முடியாத அளவுக்கு மிகவும் கடுமையான புதிய கட்டுப்பாட்டுத் திட்டங்களை வகுத்து வருகிறோம்” எனத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
தூக்கமில்லாமல் தவிக்கும் தவெக
இந்த இரண்டு வழக்குகளுமே சாதாரணமாகக் கடந்து போகக்கூடியவை அல்ல. சொத்து விபரங்களை மறைத்த விவகாரம் நிரூபிக்கப்பட்டால் அது விஜய்யின் முதல்வர் பதவிக் காலத்திற்கே உலை வைக்கக்கூடியது. அதேபோல், தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய வழக்கில் தேர்தல் ஆணையத்தின் கடுமையான நிலைப்பாடும் தவெக-வுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்று மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்று வரும் வேளையில், இந்த இரு சட்டச் சிக்கல்களும் விஜய்க்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளன.
