கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நீண்ட முடி மற்றும் ‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் பள்ளிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே முடி திருத்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் ஒழுக்கத்துடன் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை தற்போது சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: சி.விஜயபாஸ்கருக்கு பேரிடியை இறக்கிய செய்தி..! உயர் நீதிமன்றம் அதிரடி..!
கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் அருகே செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
சமீப காலமாக, சில மாணவர்கள் திரைப்பட நடிகர்களின் சிகை அலங்காரத்தைப் பின்பற்றி, நீண்ட முடி மற்றும் ‘புள்ளிங்கோ’ பாணியில் தலைமுடியை வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதாக ஆசிரியர்கள் கவனித்துள்ளனர்.
பள்ளியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணாக இருந்ததால், மாணவர்கள் அனைவரும் நேர்த்தியான முறையில் முடி வெட்டி வர வேண்டும் என்று தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் பலமுறை அறிவுறுத்தியிருந்தனர்.
இதையும் படியுங்க: “ஆசிரியரா இவர்? மாணவனை இரும்புச் சுத்தியலால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”
அதுமட்டுமின்றி, பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களிலும் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டு, மாணவர்களின் தலைமுடியை ஒழுங்காக வெட்டி அனுப்புமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சில மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அதனை பெரிதாகக் கவனிக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மாணவர்களிடம் ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் உள்ளிட்ட காவல்துறையினரின் ஒத்துழைப்புடன், மூன்று முடி திருத்தும் தொழிலாளர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர், ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று, பள்ளி விதிமுறைகளை மீறி நீண்ட முடி மற்றும் ‘புள்ளிங்கோ’ பாணியில் தலைமுடி வைத்திருந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின், வகுப்பறையிலேயே அவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி திருத்தம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்க: “பெற்றோர்களே ஒரு நொடி உஷார்! 3 வயது குழந்தையின் உயிரைப் பறித்த ஒரு குட்டி நிலக்கடலை…
இந்த நடவடிக்கையின் போது 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சில தகவல்களின்படி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நடவடிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் தலைமுடி பரிசோதிக்கப்பட்டு, விதிமுறைகளை மீறியவர்களுக்கு முடி வெட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்கள் திரைப்பட நடிகர்களைப் போல சிகை அலங்காரம் செய்து பள்ளிக்கு வருவதை விட, கல்வி மற்றும் ஒழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், பள்ளி என்பது கல்வி கற்பதற்கான இடம் என்பதால், அங்கு அனைவரும் ஒரே மாதிரியான ஒழுக்க விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்கள் தோற்றத்தில் அல்ல, திறமையிலும் கல்வியிலும் முன்னேற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்க: “139 சவரனுக்கு கோவிந்தா..! கடையை பூட்டிவிட்டு குடும்பத்தோடு எஸ்கேப் ஆன ஓனர்.. ஆண்டிபட்டியில் பகீர் மோசடி!”
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் கலவையான கருத்துகள் பதிவாகி வருகின்றன. பலர், பள்ளிகளில் ஒழுக்கத்தை நிலைநாட்ட ஆசிரியர்கள் எடுத்த இந்த நடவடிக்கையை வரவேற்று பாராட்டியுள்ளனர். அதேவேளையில், மாணவர்களின் சம்மதம் மற்றும் உரிமைகள் குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எதுவாயினும், பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் கடலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் எடுத்த இந்த நடவடிக்கை, தற்போது தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
