அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தைச் சேர்ந்த மார்த்தா ஆன் லில்லார்ட் (Martha Ann Lillard), தனது 5-வது வயதில் போலியோ (இளம்பிள்ளை வாதம்) நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 73 ஆண்டுகளுக்கும் மேலாக ‘இரும்பு நுரையீரல்’ (Iron Lung) எனப்படும் எதிர்மறை அழுத்த சுவாசக் கருவியின் (Negative-pressure ventilator) உதவியுடன் சுவாசித்து வாழ்ந்தவர். அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தனது 78-வது வயதில் காலமானார்.
1953-ஆம் ஆண்டு, வெறும் 5 வயதிலேயே மார்த்தா போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயின் தீவிரத்தால் அவரது சுவாசத் தசைகள் செயலிழந்தன. இதன் காரணமாக, அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்கள் அவரை ‘இரும்பு நுரையீரல்’ எனப்படும் சுவாச உதவி கருவியில் வைத்தனர். அப்போது, “அவர் 20 வயதைக் கூடத் தாண்டி உயிருடன் இருப்பது மிகவும் கடினம்” என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மன உறுதியும் விடாமுயற்சியும் கொண்டு அந்த கணிப்பை முறியடித்து, அவர் 78 வயது வரை வாழ்ந்து சாதனை படைத்தார்.
அமெரிக்காவில் போலியோ தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோயின் தாக்கத்தால் அவரது கழுத்துக்குக் கீழே உள்ள உடல் உறுப்புகள் முழுமையாக செயலிழந்தன.
சுயமாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், வாழ்நாள் முழுவதும் ‘இரும்பு நுரையீரல்’ கருவியையே அவர் நம்பி வாழ வேண்டிய சூழல் உருவானது.
2024-ஆம் ஆண்டு, இதேபோன்று ‘இரும்பு நுரையீரல்’ உதவியுடன் வாழ்ந்த பால் அலெக்சாண்டர் காலமான பிறகு, மார்த்தா ஆன் லில்லார்ட் உலகில் இந்த கருவியின் உதவியுடன் வாழ்ந்து வந்த கடைசி போலியோ நோயாளி எனக் கருதப்பட்டார்.
அவரது மறைவு, போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்பட்ட வாழ்க்கைப் பயணத்திற்கும் ஒரு நிறைவுக் கட்டமாக அமைந்துள்ளது.
வாழ்நாள் முழுவதும் மருத்துவச் சவால்களை எதிர்கொண்ட போதிலும், மார்த்தா வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். தனது இடது கையை மட்டுமே பயன்படுத்தி அழகிய ஓவியங்களை வரைந்தார்; கவிதைகளையும் எழுதியார். உடல் வரம்புகள் இருந்தபோதிலும், கலை மற்றும் இலக்கியத்தின் மூலம் தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றினார்.
மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரண்டு முறை கடுமையான கொரோனா தொற்றுக்கும் அவர் ஆளானார். இருப்பினும், அதிலிருந்தும் மீண்டு தனது மன உறுதியை வெளிப்படுத்தினார்.
மார்த்தா ஆன் லில்லார்டின் வாழ்க்கை, போலியோ நோயின் தீவிரத்தையும், மருத்துவ அறிவியலின் பரிணாம வளர்ச்சியையும், தடுப்பூசிகளின் அவசியத்தையும் உலகிற்கு நினைவூட்டும் ஓர் உயிருள்ள வரலாறாக இருந்தது. அவரது மறைவு, போலியோவுடன் நீண்ட காலம் போராடிய ஒரு சகாப்தத்தின் முடிவாக மருத்துவ உலகினரால் கருதப்படுகிறது.
போலியோ தடுப்பூசி அறிமுகமாகும் முன், இந்த நோய் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரையும் உடல் நலனையும் கடுமையாக பாதித்தது.
இன்று தடுப்பூசிகளின் வெற்றியால் பல நாடுகளில் போலியோ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மார்த்தா ஆன் லில்லார்டின் வாழ்க்கை அந்த நோயின் கொடூரத்தையும், மனித மன உறுதியின் மகத்துவத்தையும் என்றும் நினைவூட்டும் வரலாற்றுச் சாட்சியாகத் திகழும்.
