சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரிதமாக செயல்பட்டு அவரது உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
தாம்பரம் இரும்புலியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், திருவான்மையூரிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
பேருந்து பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாணவிக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மயக்கமடைந்தார்.
இதைக் கவனித்த பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் உடனடியாக துரிதமாக செயல்பட்டு, பேருந்தை நேரடியாக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு இயக்கிச் சென்று, மாணவியை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்ததால், மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டது.
உயிர் ஆபத்தான சூழ்நிலையில் சரியான நேரத்தில் மனிதநேயத்துடன் செயல்பட்டு மாணவியின் உயிரைக் காப்பாற்றிய மாநகரப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
