உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் புதிய உமிழ்வு விதிகள் (Emission Norms) காரணமாக, பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன.
அதன்படி, மாருதி சுசுகி நிறுவனம் தனது பெரும்பாலான மாடல்களின் விலையை உயர்த்துகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் மற்றும் வணிக வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.
மேலும், ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் உள்ளீட்டுச் செலவுகள் (Input Costs) அதிகரித்துள்ளதால் விலைகளை மாற்றியமைத்துள்ளன.
இதேபோல், ஹீரோ மோட்டோகார்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஹோண்டா நிறுவனமும் தயாரிப்புச் செலவு அதிகரிப்பை காரணமாகக் காட்டி விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் செலவுகள், தளவாடச் செலவுகள் மற்றும் பிற செயல்பாட்டு செலவுகளை ஓரளவு ஈடு செய்யும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, நாளை முதல் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் விலை சுமார் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளன. வாகனங்களின் மாடல்கள் மற்றும் வகைகளின் அடிப்படையில் இந்த விலை உயர்வு மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
