தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அரியணை ஏறியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் அடுத்தடுத்த ராஜினாமா மற்றும் முதல்வர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா எனத் தமிழ்நாட்டில் ‘மெகா’ இடைத்தேர்தல் நடத்த தவெக அரசு வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில், அறிவாலய வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ள ஒரு பரபரப்புத் தகவல் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. “இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடப் போவதில்லை” என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொளத்தூரில் விழுந்த அடி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தவெக அலையில் சிக்கித் தோல்வியைத் தழுவினார். அதேபோல் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மாஸ் காட்டி வென்றார் விஜய்.
சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியடைந்து, கோட்டையையும் வாரி வழங்கிவிட்டுத் தவிக்கும் தி.மு.க-விற்கு, இந்தத் தேர்தல் தோல்வி ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறவில்லை. இத்தகைய சூழலில், ஆட்சிக்கு வந்த 40-50 நாட்களிலேயே அசுர பலத்தோடு தவெக நிற்கும் போது, மீண்டும் ஒரு தேர்தல் களத்தை எதிர்கொள்வது தற்கொலைக்குச் சமம் என தி.மு.க தலைமை கருதுகிறது.
ஆளுங்கட்சிக்கே சாதகமான ‘இடைத்தேர்தல் வரலாறு’
அரசியல் பொதுவிதிப்படி, ஒரு மாநிலத்தில் பொதுத்தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே இடைத்தேர்தல் வந்தால், அது 99% ஆளுங்கட்சிக்கே சாதகமாக முடியும். புதிதாகப் பதவியேற்ற அரசுக்கு மக்கள் இன்னும் சில காலம் அவகாசம் கொடுக்க நினைப்பார்கள். மேலும், ஆளுங்கட்சியின் அதிகார பலம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியிருக்கும் வேகம் ஆகியவை தவெக-விற்குப் பெரும் பலமாக இருக்கும்.
ஸ்டாலினின் கணக்கு
“இடைத்தேர்தலில் எப்படியும் விஜய் தரப்பே வெல்லப் போகிறது. அதற்கு நாம் ஏன் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, மீண்டும் ஒருமுறை தோல்வியைப் பெற்று, கட்சியின் தொண்டர்களைச் சோர்வடையச் செய்ய வேண்டும்?” என மு.க.ஸ்டாலின் தனது நிர்வாகிகளிடம் தர்க்கரீதியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
“இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம், தவெக பெறப்போகும் வெற்றியை ‘ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்’ என்று முத்திரை குத்த தி.மு.க திட்டமிடுகிறது.
நாங்கள் போட்டியில் இல்லாததால் தான் தவெக இத்தனை இடங்களில் வென்றது என்றும், ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தல் நடக்கவில்லை என்றும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய தி.மு.க இப்போதே ‘ரூட் மேப்’ போட்டு வருகிறது.
இரும்புக்கோட்டையாக மாறும் தவெக
தி.மு.க களத்தில் இருந்து பின்வாங்கினாலும், அ.தி.மு.க-வில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடு தவெக இந்த இடைத்தேர்தல் டார்க்கெட்டை நோக்கித் தீவிரமாக நகர்கிறது. சட்டசபையில் தனது தனிப் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து, எதிர்க்கட்சிகளின் ‘குதிரை பேர’ப் பகற்கனவுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
