Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக திமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து, அவரை உடனடியாக அமைச்சரவைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, அமைச்சர் சரத்குமார் வெள்ளை நிறப் பொடியைப் பயன்படுத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சரத்குமார், அது போதைப்பொருள் அல்ல என்றும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கிக் கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தெரிவித்தார்.

ஆனால், அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக, அவரை உடனடியாக அமைச்சரவைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை அறிவித்தது.

இதனிடையே, பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி, சென்னை எழும்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவின் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திமுக மாணவர் அணியினர் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தினர்.

இதையும் மீறி, சென்னை வேப்பேரி டோவெட்டன் சந்திப்பு மற்றும் எழும்பூர் பகுதிகளில் திமுகவினர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் 250-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த வீதிப் போராட்டங்களும் கைது நடவடிக்கைகளும் தமிழக அரசியலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தஞ்சையில், பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மாணவர் அணியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் முன்பு திமுக மாணவர் அணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தவெக அரசுக்கும் அமைச்சர் சரத்குமாருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில், அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி – சித்தூர் பேருந்து நிலையம் அருகே, வேலூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில், அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மற்றும் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago