‘எல்-நினோ’ (El Niño) தாக்கத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிக வெப்பமடைவதால் உருவாகும் எல்-நினோ நிகழ்வின் தாக்கத்தால், நிகழாண்டில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கமான சராசரியைவிட குறையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் 27 மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, தமிழகத்தில் பின்வரும் 12 மாவட்டங்கள் எல்-நினோவால் வறட்சி பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன:
- அரியலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- கிருஷ்ணகிரி
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- ராமநாதபுரம்
- திருச்சி
- திருப்பத்தூர்
- வேலூர்
- விருதுநகர்
விவசாய பாதிப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆறு மாதங்கள் வரை வளரும் நீண்ட காலப் பயிர்களுக்கு பதிலாக, குறைந்த அளவு தண்ணீரில் வளரக்கூடிய எள், பருப்பு வகைகள் உள்ளிட்ட குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், வறட்சியை சமாளிக்கும் வகையில் நீர் ஆதாரங்களை சேமித்து, திறம்பட மேலாண்மை செய்ய மாநில வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழையின் நிலவரத்துக்கு ஏற்ப வேளாண் திட்டங்களை உடனுக்குடன் மாற்றியமைக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்-நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு குறையும் வாய்ப்பு இருப்பதால், விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
