நாளைய தூண்களாக விளங்க வேண்டிய பள்ளி மாணவர்கள், இன்று அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை கட்டும் கட்சி யூஸ் ஆன்ட் துரோவாக பயன்படுத்திய அவலம் அரங்கேறியுள்ளது. தவெக தலைவர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆம்பூர் வடபுதுப்பட்டு பகுதியில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட்டும், பணமும் கொடுத்து, ஆபத்தான தேசிய நெடுஞ்சாலையில் கொடி நட வைக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “மாணவர்களை வைத்து கட்சி வளர்க்க வேண்டிய அவசியமில்லை” என்று மாவட்ட செயலாளர் நவீன்குமார் மழுப்பினாலும், வெளியான வீடியோ ஆதாரங்கள் தவெக-வின் பொறுப்பற்ற அரசியலை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வட புதுப்பட்டு பகுதியில், பள்ளி மாணவர்களை வைத்து தேசிய நெடுஞ்சாலை தடுப்பு வேலியில் தவெக கட்சி கொடிகளை நட்டு வைத்ததாக அப்பகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டாக உள்ளது

தமிழ்நாடு முதல்வரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கட்சி கொடி கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் அப்போது, வடபுதுப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி சில மாணவர்களுக்கு சாக்லேட் மற்றும் பணம் கொடுத்து அழைத்து வந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு வேலிகளில் ஆபத்தான முறையில் கட்சி கொடிகளை கட்ட வைத்துள்ளனர் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சீருடையில் சில பள்ளி மாணவர்கள் தவெக கட்சி கொடிகளை நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு வேளையில் கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இதுகுறித்து திருப்பத்தூர் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமாரிடம் ‘REPUBLIC தமிழ்நாடு’ செய்திக்காக விளக்கம் கேட்டோம். ‘கட்சி கொடியை நம்ம நிர்வாகிகள்தான் கட்டினார்கள். அந்த வழியாக சென்ற மாணவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் கட்டி இருந்த கொடியை கழட்டி கொண்டு சென்றார்கள். மாணவர்கள்களை வைத்து கட்சியை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. தலைமையும் அப்படிதான் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது” என்றவரிடம் ”வெளியான வீடியோவில் அந்த மாணவர் ஒருவர் கொடியை கட்டி விட்டு மீண்டும் ஒரு இடத்தில் கட்டி விட்டு செல்கிறாரே என கேட்டதற்கு ‘? கொடி எப்படி வந்தது என யாராவது மாணவர்களிடம் கேட்டால் என்ன செய்வது? என்ற பயத்தில் மீண்டும் கழட்டிய கொடியை அங்கேயே கட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள் என ஒரு போடு போட்டார்.
“சர்ச்சை வீடியோ குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசினிர்களா? என கேட்டதற்கு ? சம்பவம் நடந்த அன்று நான் ஆம்பூரில் தான் இருந்தேன். எங்கள் தலைவர் பிறந்த நாளான நேற்று அந்த வீடியோ வெளியாகி இருந்தது. குடியாத்தம் செல்லும் வழியில் சில நிர்வாகிகளை அழைத்து கேட்டதற்கு கட்டி இருந்த கொடியை மாணவர்கள் கழட்டி எடுத்து சென்றதாக கூறியுள்ளார்கள். மற்றப்படி இதில் அரசியல் ஏதும் இல்லை” என்றார்.
வாணியம்பாடி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமலும் பிஞ்சு மனசில் மாணவர்களை கட்சிக்கு அடிமைப்படுத்த இது போன்ற செயல்களில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
