கத்தாரில் உள்ள இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள பார்சான் (Barzan) உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 2026) இரவு இந்த விபத்து நேரிட்டுள்ளது.
ஆலை செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இந்தியர்கள் 12 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பபித் (26) மற்றும் சுஜித்குமார் (25) ஆகிய இரு இளைஞர்களும் அடங்குவர். இவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் (Embassy of India, Doha), கத்தார் அரசு அதிகாரிகளுடன் இணைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தோஹாவில் உள்ள இந்திய தூதரகம், கத்தார் அதிகாரிகளுடன் தொடர்ந்து நேரடித் தொடர்பில் இருந்து வருகிறது. விபத்தில் உயிரிழந்த 12 இந்தியர்களின் உடல்களையும் விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான சட்டப்பூர்வ மற்றும் தூதரக ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மற்றும் ஆலோசனைகளும் வழங்கத் தூதரக அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
இதனிடையே, கத்தார் சர்வதேச தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் (Qatari International Search and Rescue Group) விபத்து நடைபெற்ற பார்சான் எரிவாயு ஆலைப் பகுதியில் தங்களது தேடுதல் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் இறுதி நடவடிக்கைகள் மற்றும் தடயவியல் பரிசோதனைக்கான அனுமதிகள் பெறும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
