விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தவெக-வில் இணைவதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், “எதிர்கால அரசியல் மாற்றத்தின் நம்பிக்கையாகத் திகழும் தவெக தலைவர் விஜய் தலைமையில் விஜயபாஸ்கர் இணைந்தால், அதை முழுமனதோடு ஆதரிப்போம்” என அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
விஜயபாஸ்கரின் திட்டம்
புதிய நிர்வாகிகளின் முன்னிலையில் இணையாமல், நேரடியாக முதலமைச்சரின் முன்னிலையிலேயே தவெக-வில் இணைய விஜயபாஸ்கர் விரும்புவதாகவும், விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை அதிமுகவில் நிலவும் குழப்பம்
விஜயபாஸ்கரின் இந்த நகர்வுகளுக்குப் போட்டியாக, அதிமுகவால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பழனிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு கடுக்காக்காடு கிராமத்தில் பிரம்மாண்ட கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கமே இருப்பதாகக் காட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்றாலும், மாவட்டத்தின் பெரும்பான்மை நிர்வாகிகள் விஜயபாஸ்கர் பக்கமே இருப்பதாகக் கூறப்படுகிறது.
