சமூகத்தின் ஆன்மாவாகவும், பண்பாட்டின் வேராகவும் போற்றப்படுபவள் பெண். “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற கவிமொழிக்கேற்ப, தாய்மை என்பதும், பெண்மை என்பதும் புனிதத்தின் அடையாளங்கள். ஒரு குடும்பத்தின் ஒழுக்கத்தையும், அடுத்த தலைமுறையின் நற்பண்புகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழும் பெண்கள், இன்று ‘நவீனம்’ என்கிற பெயரில் மது கலாச்சாரத்திற்குள் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு வருவது பெரும் வேதனை.
மேற்கத்திய மோகமும், உயர்குடி கலாச்சாரம் என்கிற போலி கௌரவமும் இன்று பல குடும்பங்களின் அமைதியைக் குலைத்து நிர்மூலமாக்கி வருகின்றன. மது என்பது ஒரு தனிமனிதப் பழக்கத்தைத் தாண்டி, அது ஒரு தாயின் கரங்களில் சேரும்போது, அந்த வீட்டின் எதிர்காலமே இருளத் தொடங்குகிறது. ஒரு குழந்தை தனது முதல் பாடத்தைத் தாயிடமிருந்தே கற்கிறது. அங்கே ஒழுக்கம் சிதைந்து, போதை தலைதூக்கும்போது, அந்தத் தலைமுறையே நற்பண்புகளிலிருந்து அந்நியப்பட்டுப் போகிறது.
இது குறித்து பாகேஷ்வர் தாம் தலைமை அர்ச்சகர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் இதுகுறித்து பேசிய அவர், “பணக்கார பெண்களும், தாய்மார்களும் தற்போது மது அருந்தத் தொடங்கியுள்ளனர். இது சமூகத்தின் அடிப்படை விழுமியங்களைச் சீரழிக்கிறது. தாய்மார்களே மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகும் போது, அது அடுத்த தலைமுறையினரிடம் தவறான விழுமியங்களைப் புகுத்தும்.
பெண்கள் மது அருந்தும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளின் ஒழுக்கம், பண்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். ஒரு தாய் மது அருந்தினால், அவர் தனது குழந்தையையும் அதே பாதையில்தான் வழிநடத்துவார். அந்த வீடுகளில் குழந்தை அழுதால், அதை அமைதிப்படுத்த மதுவையே ஊட்டிவிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று அவர் கிண்டலாகப் பேசியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் இடம்பிடிப்பது இது முதல் முறையல்ல. மதம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் குறித்து அவர் பேசும் பல கருத்துக்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
சாஸ்திரியின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. “பெண்களை மட்டுமே குறிவைத்து பேசுவது ஏன்?”, “தனிமனித சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை” என ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், அவரது ஆதரவாளர்கள், “சமூகச் சீரழிவைத் தடுக்கவே அவர் இவ்வாறு பேசுகிறார்” என அவருக்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
