திரையுலகின் மாபெரும் இயக்குநரான பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த சினிமா உலகமும் அதிர்ச்சியடைந்த வேளையில், நடிகை ராதிகா சரத்குமார் குடும்பத்தில் ஒருவராக முன்னின்று அனைத்து காரியங்களையும் கவனித்துக் கொண்டார். பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் அறிமுகமான ராதிகா, அவரை எப்போதும் தன் தந்தைக்கு நிகராகவே மதித்து வந்தார்.
அவரது இறுதிச் சடங்கின் போது, துக்கத்தில் மூழ்கியிருந்த பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலாகவும், இறுதி அஞ்சலி செலுத்த வந்த திரையுலகினரையும், பொதுமக்களையும் நெறிப்படுத்துவதிலும் ராதிகா உடனிருந்து உதவினார். தன் திரைவாழ்வின் வழிகாட்டிக்குச் செய்யும் கடமையாக, இறுதிவரை உடனே இருந்து கண்ணீர் மல்க அவர் விடைகொடுத்தார்.
இந்நிலையில் இருவருக்குமான உறவு குறித்து நடிகை ராதிகா தனது எக்ஸ் தளப்பதிவில், “என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன். இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது. என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
