https://republictn.com/

இந்திய தொலைக்காட்சி உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷிண்டே, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்குப் பிறகு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் 1999ஆம் ஆண்டு சின்னத்திரை துறையில் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார்.

ஆரம்ப காலத்தில் நெகட்டிவ் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், அம்ரபாலி, மிஸ் இந்தியா, ஹரிமிர்சி, லால் மிர்சி உள்ளிட்ட பல இந்தி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும், இந்திய அளவில் அவருக்கு பெரும் புகழைத் தேடி தந்தது “பாபிஜி கர் பர்ஹை ஹை” என்ற தொலைக்காட்சி தொடர் ஆகும்.

இந்த தொடரில் அவர் நடித்த அங்கூரி பாபி என்ற நகைச்சுவை கலந்த இல்லத்தரசி கதாபாத்திரம், அவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. உத்தரப் பிரதேசம் கான்பூரை பின்னணியாகக் கொண்டு, இரு அண்டை குடும்பங்களுக்கிடையேயான நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்த தொடர், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த தொடர் உச்சத்தில் இருந்த 2016ஆம் ஆண்டில், ஷில்பா ஷிண்டே மற்றும் தயாரிப்பாளர்கள் பினைபர் கோலி மற்றும் அவரது கணவர் சஞ்சய் கோலி இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தன்னை கட்டுப்படுத்தும் வகையில் பிரத்தியேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும், சம்பள உயர்வைத் தடுக்க முயன்றதாகவும் ஷில்பா குற்றம் சாட்டினார்.

மறுபுறம், ஷில்பா ஒழுங்கீனமாக நடந்து கொண்டு, திடீரென படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தயாரிப்பு தரப்பு குற்றம் சாட்டியது. இதையடுத்து அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த மோதலின் காரணமாக 2016 மார்ச் மாதத்தில் அவர் அந்த தொடரிலிருந்து விலகினார்.

இதன் தொடர்ச்சியாக 2017ஆம் ஆண்டு, தயாரிப்பாளர் சஞ்சய் கோலி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஷில்பா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டு இந்தி தொலைக்காட்சி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பின்னர் சில மாதங்களில், இரு தரப்பும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டன. தயாரிப்பு நிறுவனம் வழங்க வேண்டிய மூன்று மாத சம்பள பாக்கி உள்ளிட்ட தொகைகள் முழுமையாக செலுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் இரு தரப்பும் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழக்கு முடிவுக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் ஒரு பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷில்பா ஷிண்டே, இந்த விவகாரம் தொடர்பாக புதிய விளக்கங்களை வழங்கியுள்ளார்.

அந்த பேட்டியில், தயாரிப்பாளர் சஞ்சய் கோலி மீது முன்பு சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு உண்மையல்ல என ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பள பிரச்சினை மற்றும் கடுமையான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவே அந்த புகாரை அளித்ததாகவும், அப்போது மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும், திரையுலகத்திலும் ஷில்பா ஷிண்டேவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடிகைகள் பூஜா பேடி, ஹீனா கான் உள்ளிட்டோர், சட்டங்களை தவறாக பயன்படுத்தியதாக அவரை விமர்சித்துள்ளனர்.

மேலும், ஒரு ஆண்கள் உரிமை அமைப்பு, இந்த விவகாரம் தொடர்பாக ஷில்பா ஷிண்டே மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ஷில்பா ஷிண்டே, தன்னை குறிவைத்து பணம் கொடுத்து நடத்தப்படும் பிஆர் பிரச்சாரம் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவில், “நான் பணத்திற்காக அந்த புகாரை அளிக்கவில்லை. அப்போது முழு திரையுலகமும் என்னை ஒதுக்கியதால் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை எண்ணம் வரை சென்ற நிலை அது. அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கவே அந்த முடிவு எடுக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது முழு சூழ்நிலையையும் புரிந்துகொள்ளாமல் ஒரு பகுதி தகவலை மட்டும் கொண்டு தன்னை மதிப்பிடுவது தவறு எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 hours ago at 11 hours ago