நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அனந்தன் காடு’ திரைப்படம், வரும் ஜூன் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகியுள்ள இந்த அரசியல் அதிரடி த்ரில்லர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அண்மையில் வெளியான டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“இது ஒரு உண்மை சம்பவமாக மாறவிருந்த கதை…” என்ற பன்ச் வரியுடன் வெளியாகியுள்ள இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
காடு, அதனைச் சுற்றியுள்ள அரசியல், உயிர் பிழைப்பதற்கான போராட்டம் உள்ளிட்ட சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
மேலும், மலையாளத் திரையுலகில் முழுநேர கதாநாயகனாக ஆர்யா அறிமுகமாகும் முதல் நேரடி திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.
‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘லூசிபர்’ மற்றும் ‘எம்புரான்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு கதை எழுதிய புகழ்பெற்ற முரளி கோபி, இந்தப் படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.
‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்யாவுடன் இணைந்து ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல், தெலுங்கு நடிகர் சுனில், இந்திரன்ஸ் மற்றும் விஜயராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் வினோத் குமார் மற்றும் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு சில மாதங்கள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் வெளியீட்டு ஆதரவுடன் ‘அனந்தன் காடு’ திரைப்படம் ஜூன் 25ஆம் தேதி பிரம்மாண்டமாக திரைக்கு வர உள்ளது.
ஆர்யாவின் முந்தைய படமான ‘மிஸ்டர் எக்ஸ்’ கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த அதிரடி அரசியல் த்ரில்லர் திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.
