தமிழக முதல்வரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் ஜேஎஸ் கே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிப்பில் பங்கேற்றுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளராக தமன் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு பணிகளில் ஜேசன் சஞ்சயுடன் பணியாற்றிய அனுபவங்களை நடிகர் சந்தீப் கிஷன் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது: “ஜேசன் சஞ்சய் ஒரு கடின உழைப்பாளர். அவர் தனது தாத்தாவின் குணங்களை அப்படியே கொண்டுள்ளார். கதையை அவர் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகன் என்ற எண்ணமே இல்லாமல், களத்தில் இறங்கி முழுமையாக வேலை செய்கிறார்.
அவர் மிகவும் எளிமையாகவும், பணிவாகவும், தெளிவான பார்வையுடனும் செயல்படுகிறார். அவரது அணுகுமுறை மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது,” என்று சந்தீப் கிஷன் பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “வெறும் 25 வயதிலேயே திரைப்பட இயக்கத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர் மிகுந்த கவனத்துடனும், தொழில்நுட்ப அறிவுடனும் செயல்படுகிறார். கதை சொல்லும் முறையில் அவரிடம் தெளிவான காட்சிப்படுத்தும் திறன் உள்ளது.
இளைய தலைமுறையுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
