வெற்றிப் படிகட்டுகள் எப்போதுமே மலர்களால் ஆனவை அல்ல; சில நேரங்களில் அவை உடைந்த கண்ணாடித் துண்டுகளால் ஆனவை என்பதை பாடகி ஜாஸ்மின் சாண்ட்லாஸின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’-இல் ஷஷ்வத் சச்தேவ் இசையில் ஜாஸ்மின் பாடிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த வெற்றியின் பின்னே ஒளிந்திருக்கும் ஒரு பெண்ணின் தனிமை மற்றும் வலி நிறைந்த போராட்டங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பெற்றோர் தந்த காயம்
ரன்வீர் அல்லாபாடியாவின் பாட்காஸ்டில் ஜாஸ்மின் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. “பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறார்கள்?” என்ற அவரது கேள்வி, பலரின் ஆழ்மனதில் இருக்கும் வலியைத் தட்டி எழுப்பியுள்ளது. வளரும் பருவத்தில் தனக்குத் தேவையான வழிகாட்டுதலும், அரவணைப்பும் கிடைக்காதது அவரை மனரீதியாகப் பாதித்துள்ளது.
பெற்றோர்கள் அறியாமலேயே செய்யும் சில செயல்கள் குழந்தைகளின் பிஞ்சு மனதை எப்படிச் சிதைக்கிறது என்பதை ஜாஸ்மின் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். “நான் அவர்களை நேசிக்கிறேன், ஆனால் ஒரு குழந்தையின் இதயம் உடைந்தால், அது உடைந்த நிலையிலேயேதான் இருக்கும்” என்று அவர் கூறிய வார்த்தைகள், அவர் சுமந்து வரும் மனக்கசப்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
நான் அளவுக்கு அதிகமாகக் குடித்தேன்
வாழ்க்கை எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவரைத் தாக்கியபோது, அவர் தஞ்சம் புகுந்தது மதுவின் பிடியில். அந்த இரண்டு, மூன்று இருண்ட ஆண்டுகளை ஜாஸ்மின் இப்போது வருத்தத்துடன் நினைவு கூர்கிறார். ஒருபுறம் திரையுலகப் புகழ், மறுபுறம் சிதைந்து போன குடும்ப உறவுகள், இதற்கிடையில் தன் தந்தையின் இழப்பு என ஜாஸ்மின் நிலைகுலைந்து போனார்.
“நான் குடிக்க வேண்டியதை விட அதிகமாகக் குடித்தேன், அதற்காக இப்போது வருந்துகிறேன். ஆனால் அந்த நேரத்தில் அந்த வலியைத் தாங்கிக்கொள்ள எனக்கு அது மட்டுமே வழியாகத் தெரிந்தது,” என்று அவர் கூறியபோது அவரது குரலில் கடந்த காலத்தின் வலி அப்பட்டமாகத் தெரிந்தது.
அன்பினால் நிகழ்ந்த மீட்சி!
எவ்வளவு பெரிய பள்ளத்தில் விழுந்தாலும், தூக்கிவிட ஒரு கரம் இருந்தால் எவரும் மீண்டு வரலாம் என்பதற்கு ஜாஸ்மினின் தாயும் குடும்பமுமே சாட்சி. ஜாஸ்மின் தனது மிக மோசமான காலகட்டத்தில் இருந்தபோதும், அவரை வெறுக்காமல் அன்பு செலுத்தி மீட்டெடுத்தது அவரது குடும்பம் தான். தனக்குத் தானே அவர் நடத்திக் கொண்ட மிகப்பெரிய போராட்டத்தில், குடும்பத்தின் நிபந்தனையற்ற அன்பு அவருக்குப் பெரும் மருந்தாக அமைந்தது.
ஜலந்தரில் பிறந்து கலிபோர்னியாவில் வளர்ந்த இந்த இசைப் பறவை, 2008-ல் தனது பயணத்தைத் தொடங்கியது. சல்மான் கானின் ‘கிக்’ படத்தில் பாடிய ‘யார் நா மிலே’ பாடல் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். இன்று ‘துரந்தர்’ படத்தின் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை இசைப் பட்டியல்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
‘ஷராரத்’, ‘மெயின் அவுர் து’, ‘ஜெய்யே சஜ்னா’ எனப் பல பாடல்கள் மூலம் நம்மை ஆட வைக்கும் ஜாஸ்மின், இன்று தனது தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் பலருக்கு நம்பிக்கையூட்டும் முன்மாதிரியாக மாறியுள்ளார். எவ்வளவு பெரிய இருளையும் அன்பால் வெல்ல முடியும் என்பதற்கு ஜாஸ்மின் சாண்ட்லாஸின் வாழ்க்கை ஒரு சிறந்த பாடம்.
