https://republictn.com/

முன்னாள் அமைச்சர் சிவசங்கர், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து பேசியபோது, இந்த தோல்வி திமுக தொண்டர்களிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக குளத்தூர் தொகுதி வழங்கிய தீர்ப்பு, கழகத் தொண்டர்களின் மனதில் அழியாத காயமாக பதிந்துள்ளதாக அவர் கூறினார். மேலும், இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை நாம் இழந்துவிட்டோம் மீண்டும் அவர் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தவறவிட்டோம் என்ற உணர்வு பொதுமக்களிடமும் உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமைந்ததாகக் கூறிய அவர், சில தொகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்களே ஆட்சியை தீர்மானித்ததாக தெரிவித்தார். இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகளை ஆளுங்கட்சி தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், சமூக வலைதளங்களில் பல இளைஞர்கள், இளம்பெண்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் கூட அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருவதாகக் கூறிய அவர், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகி வருவதாகவும், ஆரம்பத்தில் இருந்த ஆதரவு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், அரசு அறிவிக்கும் சில திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களின் மாற்றுப் பெயர்களாகவே இருப்பதாகவும், சில வாக்குறுதிகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசையும் சிவசங்கர் கடுமையாக விமர்சித்தார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல அமைச்சர்கள் நிர்வாக அனுபவமின்றி செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி வருவதாகவும் கூறினார்.

மேலும், தவெக பெற்றுள்ள வாக்கு விகிதம் தற்காலிகமானது என்றும், அது நீண்ட கால அரசியல் ஆதரவாக மாறுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் முழுமையான அதிகாரத்துடன் செயல்படவில்லை என்றும், ஆட்சியின் பின்னணியில் வேறு சக்திகள் செயல்படுகின்றன என்ற சந்தேகத்தை அவர் முன்வைத்தார். மேலும், தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கு 35 சதவீத மக்கள் காரணமாக இருந்ததாகவும், அதில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் விஜய்யின் ரசிகர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

இந்த தேர்தல் தோல்வி திமுகவுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமைந்துள்ளதாக தெரிவித்த சிவசங்கர், “மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நல்லாட்சி மட்டுமே வெற்றியை உறுதி செய்யாது. அரசியலில் உருவாகும் புதிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது” என்றார்.

மேலும், கடந்த காலங்களில் நீண்டகாலம் எதிர்க்கட்சியாக இருந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த அனுபவம் திமுகவுக்கு உள்ளதாகவும், தற்போதைய தோல்வியிலிருந்தும் பாடம் கற்று மீண்டும் மக்கள் நம்பிக்கையை பெற்று எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தி

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago