தெலுங்குத் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரணுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையொட்டி, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ராம் சரண் தீவிரமாக பங்கேற்று வருகிறார். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது, அவரைக் காண திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ராம் சரணின் கையில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தனது தனிப்பட்ட பாதுகாப்பை ராம் சரண் மேலும் பலப்படுத்தியுள்ளார். அதன்படி, இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் பாதுகாப்புப் பணியாளர்களில் ஒருவரை அவர் தனது தனிப்பட்ட பாதுகாவலராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டைச் சேர்ந்த எம்.எம்.ஏ. (MMA) சண்டை வீரரான கெவின் குண்டா, ராம் சரணின் புதிய பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெவின் குண்டா, இத்தாலியின் புகழ்பெற்ற ‘கலேசியன் சாம்பியன் பெல்ட்’ எம்.எம்.ஏ. பட்டத்தை வென்று சர்வதேச அளவில் கவனம் பெற்றவர். ராம் சரணின் பாதுகாவலராக பொறுப்பேற்பதற்கு முன்பு, ஐரோப்பாவில் பல்வேறு விஐபிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கிய அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
