கர்நாடகாவில் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு தலைமை மாற்றத்திற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வரும் அதே வேளையில், அக்கட்சியின் உண்மையான சவால் வேறு இடத்தில் அமைந்திருக்கலாம். அதாவது, பெங்களூரில் டி.கே. சிவகுமாருக்கு இடமளிக்கும் அதே நேரத்தில், சித்தராமையாவை ஒரு தேசிய அரசியல் சொத்தாகத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதே அந்தச் சவால்.
இந்தச் சமநிலைப்படுத்தும் முயற்சியே, டெல்லியில் சித்தராமையாவுடன் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய ரகசியக் கூட்டத்தின் மையப்பொருளாக அமைந்திருக்கின்றன.
ராகுல் காந்தியின் எண்ணம் மிகவும் நேரடியானது. சித்தராமையா “கர்நாடகாவைத் தாண்டிப் பார்க்க வேண்டும்” என்பதே அவரது எண்ணம். சித்தராமையாவை பதவியிலிருந்து மெல்ல விலக்கப்படும் ஒரு மாநிலத் தலைவராக மட்டும் காங்கிரஸ் தலைமை பார்க்கவில்லை. மாறாக, 2028 கர்நாடக சட்டமன்றத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் மிக முக்கியமான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முகங்களில் ஒருவராகவே அவரைப் பார்க்கிறது.றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸின் “மிக உயர்ந்த தலைவராக” சித்தராமையா தொடர்ந்து நீடிப்பார் என்றும், தேசிய அளவில் கட்சியின் ஓபிசி மக்களைச் சென்றடையும் முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி அவரிடம் கூறியதாகத் தெரிகிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதம் முக்கியத்துவம் பெற்ற பிறகு, காங்கிரஸின் அரசியல் உத்தியில் மையமாக மாறியுள்ள ஒரு விவகாரம் இது.
இந்த ஆலோசனையில், டெல்லியில் அவருக்கு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுவது குறித்த புதிய விவாதங்களும் இதில் அடங்கும். இப்படிப்பட்ட ஏற்பாடு, கர்நாடகாவில் தலைமுறை, கோஷ்டி ரீதியான மாற்றங்களை ஒரே நேரத்தில் செயல்படுத்தவும், அதே வேளையில் தேசிய அளவில் சித்தராமையாவின் அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளவும் காங்கிரஸுக்கு உதவும்.
தற்போதைக்கு, டெல்லிக்கு உடனடியாகச் செல்லத் தனக்கு விருப்பமில்லை என்பதை சித்தராமையா பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளார். அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கவும், கர்நாடக அரசியலில் தீவிரமாகச் செயல்படவும் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் நடைபெறும் இந்தத் தலைமை மாற்றம் என்பது, ஒரு முதலமைச்சரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக மற்றொருவரை நியமிப்பது பற்றியது மட்டுமல்ல. கடந்த காலத்தில் மாநில அளவிலான தலைமை மாற்றங்களின்போது காங்கிரஸ் செய்த தவறுகளை, மீண்டும் செய்யாமல் தடுப்பது பற்றியது.
சுயேச்சையான பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் ஆதரவுத் தளம், நிர்வாக நம்பகத்தன்மை, மாநிலங்களைக் கடந்த ஈர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட சில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக சித்தராமையா திகழ்கிறார். சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் அடங்கிய அவரது அஹிந்தா சமூகக் கூட்டணி, 2023-ல் கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றிக்கு வலு சேர்த்ததுடன், மாநிலத்தைத் தாண்டியும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தொடர்கிறது.
ராகுல் காந்தி தேசிய அரசியலை சாதிப் பிரதிநிதித்துவம், சமூக நீதி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அதிகாரமளித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கட்டமைத்து வருவதால், இது குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதி கணக்கெடுப்பு அரசியலுக்காக காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுத்த நடவடிக்கைகள், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் உரையாடலை ஏற்கெனவே மாற்றியமைத்துள்ளன.
அந்தக் கட்டமைப்பிற்குள், பல மாநிலங்களில் காங்கிரஸிடம் இல்லாத ஒன்றை சித்தராமையா வழங்குகிறார். முற்றிலும் சித்தாந்தவாதியாகத் தோன்றாமல் சமூக நீதி அரசியலைத் தெரிவிக்கக்கூடிய, ஆளுகைத் தகுதிகளுடன் கூடிய, நிரூபிக்கப்பட்ட ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தலைவர்.
மாநிலத்தின் அன்றாட நிர்வாகப் பணிகளிலிருந்து சித்தராமையா விலகினாலும், கர்நாடகாவின் 2028 சட்டமன்றத் தேர்தல் வியூகத்தில் அவர் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவார் என்று ராகுல் காந்தி தெரிவித்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் செல்வாக்கை நிர்வாகப் பதவியிலிருந்து பிரிப்பதே இதன் நோக்கமாகத் தெரிகிறது. சித்தராமையா கட்சியின் சமூகக் கூட்டணியின் மையப்புள்ளியாகத் தொடர்ந்து நீடிக்கும் அதே வேளையில், சிவக்குமார் அரசாங்கத்தை வழிநடத்த அனுமதிப்பது.
சித்தராமையாவை திடீரென ஓரங்கட்டுவது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்களில் ஒரு பகுதியினரை அந்நியப்படுத்தக்கூடும் என்பதையும், கர்நாடகாவில் மிகக் கவனமாக உருவாக்கப்பட்ட சாதியக் கூட்டணியைக் குலைத்துவிடக்கூடும் என்பதையும் காங்கிரஸ் தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே, இதற்கான தீர்வாக ஒரு ‘இரட்டை வழிமுறை’ அமைவதாகத் தெரிகிறது. அதாவது, கர்நாடக மாநில நிர்வாகத்திற்கு சிவக்குமார். பரந்த தேசிய அளவிலான சமூக நீதித் திட்டங்களுக்கு சித்தராமையா.
